பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 381



பாடினோர் வரலாறுகள்
(நகவளைவிற்குள் காணப்படும் எண்கள்
மணிமிடை பவளத்தின் பாட்டு எண்கள்)

அண்டர் மகன் குறுவழுதியார் (150, 228)

இவர் பெயர் அண்டர்முன் குறுவழுதியார் எனவும், குறு வழுதியார் எனவும் காணப்படும். ‘வழுதி என்ற சொல் இவர் பாண்டியர் குடிப்பிறந்த ஒருவர் என்பதை உணர்த்துவதும் ஆகலாம். புறநானூற்று 346ஆவது செய்யுளும், குறுந்தொகை 345ஆவது செய்யுளும் இவரியற்றினவாகக் காணப்படும் வேறு சங்கப் பாடல்களாகும். அண்டர்’ என்ற பெயர் ஒருவரது இயற்பெயராகத் தோன்றாமல், யாதோ ஒரு பொறுபபினைக் குறிப்பதாக உள்ளதும் கருதத்தக்கதாகும். இந்நூலின் 150 ஆவது பாடல் நெய்தல் திணையினையும், 228 ஆவது பாடல் குறிஞ்சித் திணையினையும் சார்ந்ததாகும். முன்னது குறுவழுதியார் பாடியது எனவும், பின்னர் அண்டர்மகன் குறுவழுதியார் பாடியது எனவும் வருவதுகொண்டு இருவரும் வேறானவர் என்பாரும் உளர்.

'களைத்த நெய்தற் கண்போன் மாமலர்’ என, இதழ் செறிந்த நெய்தலது கரிய பெரிய மலரைப் பாராட்டிய இவரது 150ஆவது செய்யுளையும், இங்ஙனமே 'கண்ணென மலர்ந்த மாயிதழ்க் குவளை’ எனக் கரி இதழையுடைய குவளை மலரைப் பாராட்டிய 228ஆவது செய்யுளையும் ஒப்பு நோக்கினால், இருவரும் ஒருவராதலே உறுதிப்படும்.

அம்மூவனார் (140 280)

‘அம்மு' எனச் சேரநாட்டினர் இக்காலத்தும் பெயரிடுவது கொண்டு இவரை அந்த பகுதியாளர் எனக் கருதுவர். இவரை ஆதரித்தோர் சேரன், பாண்டியன், திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரி முதலியோர். இவராற் பாடப் பெற்ற பட்டினங்கள் தொண்டி, மாந்தை, கொற்கை, கோவலூர் ஆகியவை. ஐங்குறுநூற்று நெய்தற் பாடல்கள் நூறும் (01 - 200) இவர் பாடியவையே, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை முதலிய நூல்களுள்ளும் இவர் பாடிய செய்யுட்கள் காணப்பெறும். பெரும்பாலும் நெய்தல் திணைச்செய்யுட்களையே இவர் பாடியுள்ளார். இந்நூலினுள் 140ஆவது பாடலுள், பரதவர் மகளிர் ‘நெல்லின் நேரே உப்பு’ என உப்பு