பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 389


ஒரோடகத்துக் கந்தரத்தனார் (191)

உரோடகத்துக் கந்தரத்தனார் எனவும் வழங்கப் பெறுவர். அகத்துள் மூன்றும், குறுந்தொகையுள் ஒன்றும், நற்றிணையுள் நான்குமாக எட்டுச் செயயுட்கள் இவர் பெயரோடு சங்க நூல்களுள் காணப்படுவன. செங்கற்பட்டு மாவட்டத்து ஒரகடமே இவரது ஊர் என்பர். காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார், வண்ணப்புறக் கந்தரத்தனார் என வருவது கொண்டு, கந்தரத்தனார் என்னும் பெயர் அந்நாளிலே பரவலாக விளங்கியிருக்கலாம் எனக் கருதலாம். இந்நூலினுள் வருவ்து பாலைப் பாடலாகும். இதனை உரோடகக் கவுணியன் சேந்தன் பாடியது எனப் பாடபேதங் கொள்வாரும் உளர்.

ஒரம் போகியார் (286)

ஐங்குறு நூற்றினுள் மருதத்திணை பற்றிய 100 பாடல்களைப் பாடியவர் இவர். அகத்துள் 286, 316 ஆகிய செய்யுட்களும், குறுந்தொகையுள் ஐந்தும், நற்றிணையுள் இரண்டும், புறத்துள் 284ஆவது செய்யுளும் இவர் பாடியனவாகக் கிடைத்துள்ளன. இவராற் பாடப்பெற்றோர் ஆதன் அவினி, இருப்பையூர் விரா, அன், பாண்டியன், சோழர், மத்தி முதலாயினோர் ஆவர். இந்நூலுள்_இவர் பாடிய இச்செய்யுள் ஆசிரியர் நக்கீரனாரால் களவியல் உரையுள் காட்டப்பெற்ற சிறப்பு வாய்ந்தது. இதன்கண் கூறப்படும் ‘பெரியோர் ஒழுக்கம் பெரிது’ என்ற செய்தியின் செப்பத்தினை உணர்க.


ஒளவையார் (147, 273)

பாணர் மரபினரான இவர், அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நெருங்கிய நட்பினராக விளங்கியவர். மன்னர்கள் போற்றும் அறிவுத்திறனும், அஞ்சாமையும் உடையவர். நாஞ்சில் வள்ளுவன், தொண்டைமான, சேரமான் மாரி வெண்கோ, பாண்டியன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெறுவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகியோரைப் பாடியவர். சங்கத் தொகை நூற்களுள் அகம், குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகியவற்றுள்ளும் இவர் பாடல்கள் காணப்படும். அரசியல் தூதராகவும், ஆலோசகராகவும், அரசரும் போற்றும் சிறப்புடன் திகழ்ந்தவர் இவர். இந்நூலுள், வெள்ளிவீதியின் துயரத்தையும், காமநோய் படிப்படியாக வளரும் தன்மையினையும் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளனர். இவரும் ஆத்திசூடி முதலியன பாடிய ஒளவையாரும், தனிப் பாடல்கள் பாடியவரும் வேறு வேறானவர் ஆவார்கள்.