பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 397


நன்னிலத்துப் பகுதியிலுள்ள ஒர் ஊர். தாயன் தந்தை பெயர் எனவும், கண்ணன் இயற்பெயர் எனவும் உரைப்பர். அரசு தந்த தாய உரிமை பெற்ற சிறப்பினரும் ஆகலாம்.இவர் பாடியவையாக அகத்துள் நான்கும், குறுந் தொகையுள்ளும் நற்றிணையுள்ளும் புறநானூற்றுள்ளும் ஒவ்வொன்றுமாக ஏழு செய்யுட்கள் காணப்படுகின்றன. இவர் பாடலுள் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், எழினி, யவனர், வடுகர் ஆகியோர் பற்றிய செய்திகள் காணப்படும், கிள்ளி வளவனைப் பாடியமையால் அவனைப் பாடிய ஆலத்துர் கிழார், கோவூர் கிழார். நல்லிறையனார், ஆடுதுறை மாசாத்தனார், மாறோக்கத்துப் நப்பசலையார் போன்றோர் காலத்தவர் இவர் எனலாம். ‘சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னோடு வந்து கறியொடு பெயரும், வளங்கெழு முசிரி’ என, இந்நூலின் 149 ஆவது பாடலுள் தமிழரின் மேலைநாட்டு வாணிகத்தைப் பற்றி இவர் கூறியுள்ளனர். ஆன்றோர் அரும்பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும் எனத் தேவருலகையும் அமுதையும் குறிப்பிடுகின்றார்.

தொண்டி ஆமூர் சாத்தனார் (169)

இவர் குறும்பொறை மலைக்குக் கீழ்ப்பாலுள்ள ஆமூர் என்னும் ஊரினர். சாத்தனார் இயற்பெயர். தொண்டியின் கண்ணுள்ள சேரமரபினரால் ஆதரிக்கப்பெற்றறு, அதனால் தொண்டியில் தங்கியவராதல் பற்றித் தொண்டி ஆமூர்ச் சாத்தனார் எனப் பெற்றனர்.

'செல் கதிர் மழுகிய புலம்புகொண் மாலை
மெல்விரல் சேர்த்திய துதலள் மல்கிக்
கயலுமிழ் நீர் கண்பனி வாரப்
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லலொடு
வருந்துமால் அளியள்’

எனப், பிரிந்துறை தலைவியைத் தலைவன் நினைந்து வருந்துவ தாக இவர் காட்டும் சொல்லோவியம், நிழலோவியமாகவே நிலைபெறக் காணலாம். இவர் பாடியதாகக் காணப்படுவது இந்த ஒரே செய்யுள்தான்.

தொல் கபிலர் (282)

கபிலரினும் தொன்மை உடையவராதலால் இப் பெயரடை பெற்றனர் போலும். இவர் செய்யுட்களாகக் காணப் பெறுபவை நற்றிணையுள் நான்கும், அகத்துள் இந்த ஒன்றும், குறுந்தொகைப் பதினான்காவது செய்யுளும் ஆகும். இவர்