பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

412

அகநானூறு - மணிமிடை பவளம்


பரணர் மேற்கண்ட பாடல்களுள் கூறுவர். முடிவிலே, அழுந்தூர்த் திதியனிடம் முறையிட்டு, அவன் அம் முதுகோசர்களைக் கொன்று அழிக்கக் கண்டு, தன் சினந்தணிந்தவள். அன்னிக்கும் இவளுக்குமோ, மிஞிலிக்கும். இவளுக்குமோ எத்தகைய தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவாக அறிதல் வேண்டும்.

'ஆய் அண்டிரன் (152, 198)'

இரவலர்க்குச் சோறளித்துப பேணியவன் இவன் எனப் பரணர் கூறுகின்றார் (152), ஆயின் நாடு நல்ல வளநாடு என்று, அது தென்பகுதிய்து எனவும், அவன் நாட்டிலே ‘கவிரம்' என்ற பெயருடன் ஒரு பக்கமலை இருந்ததாகவும் (198) பரணரே கூறுவர். இவன் பொதியமலைப் பகுதிக்கண் இருந்ததாகவும், சிறந்த பெருவள்ளன்மை உடையவனாக விளங்கியதாகவும் அறிகின்றோம். வேளிர் குலத்துத் தலைவர்களுள் இவனும் ஒருவனாவான். 'வடதிசையதுவே வான் தோய் இமயம்; தென்திசை ஆஅய்குடி இன்றாயின் பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே' (புறம் 132) என்பது இந்த ஆய்குடியினரின் பெருமையை விளக்கும். இவனைப் பாடியவர்கள், இடைக் கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். உமட்டுர் கிழார் மகனார் பரங்கொற்றனார், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், காரிக் கண்ணனார், குட்டுவன் கீரனார், துறையூர் ஒடை கிழார், பரணர், பெருஞ்சித்திரனார் முதலியோராவர். இவனுடைய வள்ளன்மை மிகவும் புகழுடன் விளங்கிற்று. ‘நாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு அளித்தவன்; பாடி வந்தார்களுக்குக் குதிரையும், களிறும், தேரும், வளநாடும், ஊரும் அளித்த உயர்ந்தோன் இவன், புறம்.158இல் ‘திருந்து மொழிமோசி பாடிய ஆய்’ என்று வருவதால், அம் மோசியாரே இவன் அவைப் புலவராக இருந்திருக்கலாம். 'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வாணிகன் ஆய் அலன்' (புறம்134); கழல் தொடி ஆஅய் அண்டிரன்போல வண்மையும் உடையையோ ஞயிறு’ (புறம் 374) எனவெல்லாம் இவனைப் புலவர் போற்றுவர். ஆய் இறந்த காலத்து உளம் நைந்து புலவர் பாடிய பாடல் (புறம் 240) உள்ளத்தை உருக்குவதாக அமைந்ததாகும்.

'ஆட்டன் அத்தி (222, 236)'

இவன் சேரநாட்டவன். இவன் மனைவி ஆதிமந்தி என்பவள். ஆடல் வல்லவனாகிய இவனைக் காதலித்து மணந்தவள் அவள். இந்த இரண்டு செய்யுட்களும் பரணராற் செய்யப் பெற்றவை. கழாஅர்ப் பெருந்துறையின்கண் புதுப்புனல் விழாவிலே புனலாடிய ஆட்டனத்தியின் அழகினை விரும்பியவளாகக்