118
அகநானூறு - நித்திலக் கோவை
(நெய்தல் நிலத்துத் தலைவன் ஒருவன், அந் நிலத்துத் தலைமகள் ஒருத்தியைக் கண்டு காதலித்துக் களவிற்கூடி இன்புற்று வருகின்றான். அவர்கள் கூட்டம், பகற்போதிலே கானற் சோலையிடத்தே நிகழ்கின்றது. தலைவியின் ஆருயிர்த்தோழியும் தலைவியின் காதலுக்குத் துணை நிற்கின்றாள். நெடிது இந்தக் கள்ள உறவினைச் செல்லவிடாது, மணவினையினை விரைய நிகழ்விக்க விரும்புகின்றாள் அவள் அந்த எண்ணந் தோன்றப் பகற்குறி வந்து நீங்கும் தலை மகனிடத்தே, இங்ஙனம் கூறுகின்றனள்.)
கழியே, சிறுகுரல் நெய்தலொடு காவிகூம்ப
எறிதிரை ஓதம் தரல்ஆ னாதே
துறையே, மருங்கின் போகிய மாக்கவை மருப்பின்
இருஞ்சேற்றுஈர் அளை அலவன் நிவப்ப
வழங்குநர் இன்மையின் பாடுஆன் றன்றே;
5
கொடுதுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
வடிமணி நெடுந்தேர் பூண ஏவாது
ஏந்துஎழில் மழைக்கண் இவள்குறை யாகச்
சேர்ந்தனை சென்மோ - பெருநீர்ச் சேர்ப்ப!
இலங்குஇரும் பரப்பின் எறிசுறா நீக்கி
10
வலம்புரி மூழ்கிய வான்திமிற் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்
கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும்
குவவுமணல் நெடுங்கோட்டு ஆங்கண்
உவக்காண் தோன்றும்எம் சிறுநல் ஊரே!
15
கடற்கரை நாட்டிற்கு உரிய தலைவனே!
கழியிடத்தே விளங்கும் சிறுத்த பூங்கொத்துக்களையுடைய நெய்தலுடனே, செங்கழுநீர்ப்பூவும் தம்முடைய இதழ்கள் குவியப் பெற்றுள்ளன. வந்து மோதுகின்ற அலைகள் அமைதலற்ற நிலையிலே, கடலோதமும் நிலையாக விளங்கு கின்றது. துறையிடத்தே, பக்கத்தே நீண்ட பெரிய கவர்த்த கோட்டினையுடைய கருஞ்சேற்றிலுள்ள ஈரமான வளையிலிருக்கும் நண்டும் மேலே வந்துவிட்டது. இப்படியாகக் கடற்றுறையும் செல்வோர் இல்லாமையினாலே ஒலியடங்கியதாயிற்று.
விளங்கும் பெரிதான கடற்பரப்பிலே, கொல்லுந் தகையினையுடைய சுறாமீன்களை ஒதுக்கியவராக, வலம்புரியின் முத்தினை எடுப்பதற்காகக் கடலுள் மூழ்கிய, பெரிய படகினை உடையயோரான பரதவர்கள், ஒலியினைத் தம்பால் உடைய