40
அகநானூறு -நித்திலக் கோவை
'அவ்விடத்து அவனுடைய கூட்டம் பெறாத இளம்பரத்தையர் வருத்தமுற' என்றதாம்.
மேற்கோள்: தொல்காப்பியக் கற்பியலின், 'பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின்’ என்னுஞ் சூத்திரத்து, உணர்ப்புவயின் வாரா ஊடலுற் றோன்வயின், உணர்த்தல் வேண்டிய கண்ணும்' என்னும் பகுதியில், இச்செய்யுளை எடுத்துக் காட்டி, 'இது தோழி தலைவியை வெகுண்டு ஆக்கியவாறு காண்க' என்று உரைப்பர் நச்சினார்க்கினியர்.
தொல்காப்பியப் பொருளியலின், 'வருத்தமிகுதி சுட்டுங் காலை' என்னுஞ் சூத்திர உரையுள், இச்செய்யுளுள் வரும் 'அது புலந்துறைதல் வல்லியோரே' என்ற பகுதியைக் காட்டிப், ‘புலவியால் நின் இல்வாழ்க்கை குறைபடுமெனத் தோழி கூறியவாறு காண்க' எனவும் நச்சினார்க்கினியர் உரைத்துள்ளனர்.
பாடியவர்: வடமோதங்கிழார். திணை: பாலை. துறை: தலைமகன் வரவுணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது.
(வரைவிடை வைத்துப் பொாருள்வயிற் பிரிந்து சென்றிருக்கிறான் தலைவன். பிரிவுத் துயரினாலே மெலிவுற்றனள் தலைவி. எனினும் தன் யாயும் பிறரும் அறியாவாறு மறைத்தும் ஒழுகி வந்தனள். அவளுடைய வேதனை அவளுடைய தோழிக்குக் கலக்கத்தைத் தந்தது. அவன் குறித்துச் சென்ற பருவத்தும் வராதுபோகவே அவர்கள் துயரம் நனிமிகுந்தது. அவ்வேளை, தலைவனும் வந்து நிற்கத் தோழி கவலை நீங்கிய களிப்பினளாகச் சொல்லிய முறையில் அமைந்தது இச்செய்யுள்)
"மாக விசும்பின் மழைதொழில் உலந்தெனப்
பாஅய் அன்ன பகலிருள் பரப்பிப்
புகைநிற உருவின் அற்சிரம் நீங்கக்
குவிமுகை முருக்கின் கூர்துனை வைஎயிற்று
முதிராப் பல்லிதழ் உதிரப் பாய்ந்துடன்
மலருண் வேட்கையின் சிதர்சிதர்ந் துகுப்பப்
பொன்செய் கன்னம் பொலிய வெள்ளி
நுண்கோல் அறைகுறைந்து உதிர்வன போல