2 • அகமும் புறமும்
–––––––––––––––––––––––––––––––––––––
அமைதி வேட்டை
உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும் இவ்வமைதியை நாடி அலைகிறான். எத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்தால் இது எளிதில் கிட்டும் என்றறியப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித சமுதாயம் வாழ்ந்து பார்க்கின்றது. தனி வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என்ற பலவகை வாழ்க்கையிலும் மனிதன் நாடி அலைவது இவ்அமைதியையே.
தமிழன் கண்ட விடை
ஏனைய சமுதாயத்தார் இத்தகைய அமைதி வேட்டையில் இறங்குமுன்னரே தமிழன் அமைதியை அடைய மிகுதியும் உதவும் ஒரு சூழ்நிலையைக் கண்டான். அதுவே இல்வாழ்க்கை எனப்படும். பிறநாட்டார் இல்வாழ்வின் இன்றியமையாமையை அறியுமுன்னரே இவன் அதன் பெருமையை நன்குணர்ந்தான்.
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்கு.
(குறள்–49)
என்றும்,
என்றும் எழுந்த கூற்றுக்கள் இவ்வுண்மையை உணர்த்துகின்றன. அறத்தின் வழி வாழ்வதன் சிறப்பை உணர்த்திய வள்ளுவர், அடுத்து ‘அறன்’ எனப்பட்டதே இல்வாழ்க்கை என்று கூறுவாராயின், இல் வாழ்வின் சிறப்பை வேறு எவ்வாறு விளக்குவது? மேலும், அறம் என்ற சொல்லையே பெய்து ‘இல்லறம்’ என்று பெயரும் இடுவாராயின், எத்துணைத் தூரம் அதன் சிறப்பை அறிந்திருந்தனர் இத்தமிழர் என்பது கூறவும் வேண்டுமோ?