பக்கம்:அகமும் புறமும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகம் – அகத்தின் அடிப்படை • 3


இரு வகை அறிவு

மிகப் பழைய காலத்தேகூட மனிதன் தன் வாழ்வு முழுத்தன்மையுடையதாய் இருத்தல் வேண்டும் என்று விரும்பினான். முழு வாழ்வு என்று எதனைக் குறிக்கின்றோம். மனிதனிடத்துக் காணப்படும் பொறிபுலன்களும் அறிவும் நன்கு பயன்படும் பொழுது அதனை முழுவாழ்வு எனக் கூறுகிறோம். ஏனைய விலங்கினங்களிலிருந்து மனிதனைப் பிரிப்பது அவனுடைய நுண்மை பொருந்திய மூளை. இம் மூளையின் பயனாக அவனுக்குக் கிடைத்தது அறிவு. அறிவு ஆயப் பயன்பட்டது. பரந்துபட்ட உலகில் பல்வேறு வடிவுடனும் உருவுடனும் இயல்புடனும் பொருள்கள் காட்சி வழங்குகின்றன. வடிவு, உருவு, இயல்பு என்ற இவற்றை நன்கு ஆய்ந்து இப்பொருள்களின் இடையேயுள்ள வேற்றுமையைக் காண்கிறது சாதாரண அறிவு. அது கண் முதலாய பொறிகளின் வழிப்பட்ட அறிவும் ஆம். இதனையடுத்து நுண்ணிய அறிவு தொழிற்படத் தொடங்குகிறது. பொருள்களின் இடையே காணப்படும் இவ்வேற்றுமைகளில் பொதுத்தன்மை உண்டாவென ஆய்கிறது அந்நுண்ணறிவு. பொதுத் தன்மையைக்கண்டு வேறுபட்ட வடிவு, உருவு இயல்புடைய பொருள்களில் ஒற்றுமையைக் காண முற்படுகிறது நுண்ணறிவு; சுருங்கக்கூறின், வேற்றுமையில் ஒற்றுமையையும் ஒற்றுமையில் வேற்றுமையையும் காண்பதே நுண்ணறிவாகும். பொறிகளின் மூலம் கண்டோ கேட்டோ பொருள்களின் வேறுபாட்டை அறியும் அறிவைப் பொதுமறை,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
                                                           (குறள்–423)

என்றும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் நுண்ணறிவை,