பக்கம்:அகமும் புறமும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 113

சந்தித்திருப்பாள்; ஆனால், அவளுடைய தாயை மட்டும் சந்திக்க விரும்பவில்லை. என்ன செய்வது!

எவ்விதமான ஐயமும் கொள்ளாமல், “எங்கே அம்மா இவ்வளவு நேரம் சென்றிருந்தாய்?” என்று கேட்டுவிட்ட தாயையும், அவளுடைய கேள்வியையும் சற்று எதிர்பாராத தலைவி, வாயடைத்து நின்றுவிட்டாள். அவள் தாய் வேறு விதமாகப் புரிந்துகொண்டுவிட்டாள. தன் கோபத்தை எங்கே மகன் அறிந்து கொண்டு மனவருத்தம் அடைவாளோ என்று அஞ்சிய தாய், உடனே, “ஏன் அம்மா, திணைப்புனக் காவலைக்காட்டிலும் முக்கியமான காரியம் என்ன இருக்கிறது? எங்குச் சென்றிருந்தாய்?” என்று கேட்டுவிட்டாள். ‘புனக்காவலை விட்டுவிட்டு ஏன் போனாய்?’ என்று தாய் கேட்டதும் தலைவி மிகவும் அஞ்சிவிட்டாள். தான் தலைவனுடன் இருந்ததைத் தாய் கண்டுவிட்டாளோ என்ற ஐயம் மகள் மனத்தில் தோன்றிவிட்டது. மேலும் தான் ஒரு தவற்றைச் செய்துவிடடு அஞ்சி நிற்கையில் பிறர் யாது கூறினாலும், உண்மையை அறிந்துவிட்டார்களோ என்ற ஐயம் தோன்றுவது இயல்பு. ‘பூசணிக்காய் திருடியவன் முதுகு வெள்ளை நிறம் ஏறி இருக்கும்,’ என்று கூறினால், உடனே திருடியவன் முதுகைத் தடவிப் பார்ப்பது உறுதியன்றோ? எனவே, தாயின் இக்கேள்விக்கு, நான் எங்கும் வெளியே செல்ல வில்லை, என்று விடை இறுக்க நினைத்தாள் தலைவி. நன்கு பொய் கூறிப் பழக்கப்பட்டிருந்தால், பதறாமல் இவ்வாறு கூறியிருப்பாள். ஆனால் இதற்கு முன்னர்ப் பொய் கூறிப் பழக்கம் இல்லை தலைவிக்கு. எனவே, அவளையும் மீறி மெய்ம்மை வெளிப்பட்டு விடுகிறது. மெய்ம்மையை மறைக்கவேண்டும் என்று முயன்றதால் வேடிக்கையான முறையில் விடை வெளி வருகிறது. ‘நான் தலைவனைப் பார்க்கவும் இல்லை; அவனை நான் அறியேன், சுனையில் யாருடனும் சேர்ந்து நீராடவும் இல்லை.’ என்று கூறுகிறாள்.