பக்கம்:அகமும் புறமும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 177

என்றார் பொதுமறையாசிரியர். தலைவியின் நோய் யாது? தலைவன் ‘இன்னும்’ வரவில்லையே என்ற வருத்தந்தான், ‘இன்னும்’ என்பதுதானே நோயின் முதல்? அதாவது, அவன் கூறிச் சென்ற கார்காலம் வந்தும் அவன் வரவில்லையே என்ற வருத்தம். இது கார்காலம் அன்று என்று நிரூபித்து விட்டால், தலைவியின் துயரத்தின் அடிப்படை நீங்கிவிடும். நல்ல கார் காலத்தை எவ்வாறு, ‘இது கார்காலம் அன்று’ என்று கூற முடியும்? சாதாரணமானவர்களை இது கார் அன்று என்று கூறி ஏமாற்ற முடியாது.

ஆனால், தலைவியை ஏமாற்றிவிடலாம் எனத் தோழி நினைக்கிறாள். இது எவ்வாறு முடியும் என்று நினைக்கத் தோன்றுகிறதா? நன்றாக முடியும். மனித மனத்தின் கூறுபாட்டை நன்கு அறிந்தவர்கட்கு. ஒருவர் மிகுதியும் நோய் வாய்ப்பட்டிருப்பதைக் காணச் செல்கிறோம். நற்பேறின்மையின் நாம் சென்ற நேரத்தில் அவர் இறந்துபடுதலும் கூடும். நோயாளி இறந்துவிட்டதை நாம் அறிவோம். ஆனால், நோயாளியின் தாயோ, அன்றி மனைவியோ, இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தன்னால் அன்பு செய்யப்பட்ட ஒருவர் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது இந்தப் பகுத்தறிவுடைய மனித மனம்! உயிர் பிரிந்துவிட்ட நேரத்திற்கூடப் பெரிய மருத்துவர் ஒருவரை அழைத்து வந்து காட்ட முற்படுவர் எத்துணைப்பேர்! ஏன்? அவர்களுடைய அன்பின் அடிப்படையில் பிறந்த நம்பிக்கை அத்தகையது! ஆதலாலேதான், இறப்பாகிய நிகழ்ச்சியை–கண்ணெதிரே காணும் நிகழ்ச்சியை–நம்ப மறுத்து. ‘எவ்வாறாயினும் இந்த மருந்து உட்செல்லுமா!’ என்று உயிர் பிரிந்து விட்டவர் வாயில் மருந்தை ஊற்றுகின்றார்கள்!

மனித மனம் இத்தகைய விசித்திரம் நிறைந்த ஒன்று. இதனை அடிப்படையிற் கொண்டே தோழி தலைவியின்