நாட்டு வளமும் மக்கள் வளமும் • 225
–––––––––––––––––––––––––––––––––––––
வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைஇய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்
[மழை பெய்யாவிடினும் தான் தவறாமல் மலையிடத்துப் புறப்பட்டு நீரைப்பெருக்கிப் பொன் கொழிக்கும் காவிரி]
என்று கூறுகிறது. அது மழைவளங் குறையினும் தான் நீர் குன்றாது பொன்னை வாரிக் கரையில் ஏற்றும் தன்மையுடைய ஆறு.
வையை ஆற்றைப் பெண்ணாக உருவகப்படுத்துகிறார், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார ஆசிரியார்:
விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா அவிர்அறற் கூந்தல்
உலகுபுரந் துட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப்
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி
[குறுக்கும் நெடுக்கும் ஓடும் கயல் மீனாம் கண்களையும், மணம் பொருந்திய அறலாகிய கூந்தலையும், பொருந்தி உலகைக் காக்கப் பல பொருளையும் விளைவித்து ஊட்டுபவள் வையை என்ற பெண்]
இத்தகைய நீர் வளமுடைய நாடாய் இருப்பினும், தமிழ் மன்னர் சும்மா இருந்து விடவில்லை. ஆறுகள் செல்லாவிடங்களில் குளங்கள் வெட்டினர் எனப் பட்டினப்பாலை கூறுகிறது.
‘குளந்தொட்டு வளம்பெருக்கி’
(பட்டினப்பாலை–284)
‘நிலனெளி மருங்கில் நீர்நிலை பெருகத் தொட்டோர்’
‘நாட்டின் நீர்வளம் மிகும்படியாகக்
குளந் தோண்டியவரே சிறப்புடையர்’