பக்கம்:அகமும் புறமும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244 • அகமும் புறமும்


பாரியை ஒத்த வள்ளல்கள் தோன்றி வளர்ந்த நாடாகும் இது. இத்தகைய வள்ளல்கள் செல்வத்தின் பயன் எது என்பதை வாழ்ந்து காட்டினர். இரண்டு பிரிவாரும் மன அமைதியோடு வாழ்ந்தமையால் நாடு நல்ல நிலையில் இருந்தது. முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரிவினையும், அப்பிரிவினையால் ஏற்படும் துன்பங்களும் இருக்கவில்லை. செல்வர் வாழ்க்கைக்கு ஓர் உதாரணம் காண்போம். கோவலன் பெருஞ்செல்வர் குடும்பத்தில் பிறந்தவன்; மணம் ஆன பிறகு தனிக்குடும்பம் நடத்தி வந்தான்; தானே வாணிகமும் செய்தான்; மாதவியோடு சேர்ந்து “குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்தான்.” மலையத்தனை செல்வத்தை அழிப்பினும், அவளை வெறுத்து வந்த பின்னர்த் தந்தையைக் கண்டிருப்பானேயாகில் மறுபடியும் மலையத்தனை செல்வத்தைப்பெற்று மீண்டும் வாணிகம் தொடங்கியிருக்கலாம். ஆனால், மானமுடைய அவன் அவ்வழியை மேற்கொள்ளவில்லை. மீண்டும் தனது உழைப்பால் பொருள் தேடவேண்டும் என்று நினைத்தானே தவிர, எளிமையாக மானத்தை இழந்து பொருளைப் பெற வேண்டும் என்று எண்ணவில்லை. இன்று கள்ளச் சந்தையில் பொருள் தேடும் பெரியோர் நிறைந்த நம் நாட்டில் இத்தகைய உதாரணம் எங்ஙனம் வரவேற்கப்படுமோ அறியோம்! ஏழையாயினும், நடுத்தர வகுப்பாராயினும், உழைப்பையே அணிகலமாகக் கொண்டு வாழ்ந்தனர் பழந்தமிழர் உழைப்பு அல்லது முயற்சியைத் “தாள்” என்ற சொல்லால் குறித்தனர் பழந்தமிழர். முயற்சியற்ற அரசரைக் கூடப் பழந்தமிழர் எள்ளி நகையாடினர்.

‘மண்டு அமர்ப் பரிக்கும் மதனுடை நோன் தாள்’

(புறம்,-75)

என வரும் அடி பழந்தமிழர் முயற்சிப் பெருக்கைக்காட்டும்.