பக்கம்:அகமும் புறமும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டு வளமும் மக்கள் வளமும் • 247


பெரும்பாணாற்றுப்படை என்ற பாடலில் இக் கருத்துக் கூறப்படுகிறது. ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்,’ என்ற பழமொழிப்படி பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த நடுத்தர மக்களின் பொருளாதார நிலைக்கு இந்த உதாரணம் ஒன்றே சாலும். இக்கருத்துள்ள அடிகளைக் காண்க:


நள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
..............................
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளைவிலை உணவின் கிளையுடன் அருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல்லான் கருநாகு பெறுஉம்
மடிவாய்க் கோவலர்,

(பெரும்பாணாற்றுப்படை 155–66)

[குறுநெறிக் கொண்ட கூந்தல்—வளைந்துள்ள கூந்தல்; அளை—மோர்; நல்லான்—பசுக்கள்; கருநாகு—எருமைக் கன்றுக்குட்டி]

மேட்டுக்குடி மக்களைப் பற்றிச் சங்கப் பாடல்களில் மிகுதியாகக் காணப்பட்டாலும் மிக்க வறியவர் பற்றியும் இல்லாமல் இல்லை.

எனினும் நம்முடைய மனத்தில் ஓர் ஐயம் தோன்றுகின்றது. உடையார் இல்லார் என்ற இருபிரிவினர்க்கு இடையே நடுத்தர மக்கள் என்ற ஓர் இனம் இருந்திருக்கத்தான் வேண்டும்.

அவர்களது வாழ்வுமுறை, பொருளாதார அடிப்படை என்பவை எவ்வாறு இருந்திருக்கும் என்ற நினைவும் தோன்றலாம்.

பெரும்பாணாற்றுப்படையில் மேலே குறிப்பிட்ட அனைத்துக்கும் விடை பெறலாம்.