பக்கம்:அகமும் புறமும்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன்

தனி வாழ்க்கையும் கூட்டு வாழ்க்கையும்

இப்பரந்த உலகில் எங்கு மக்கள் முதன்முதலில் தோன்றினார்கள்? இவ்வினாவிற்கு முடிவான விடை இதுகாறுங் கிடைத்திலது. நிலநூல் வல்லார் தமிழ் நாட்டுப் பாறைகளும், கல்லும் மிகப் பழமை வாய்ந்தவை என்று கூறுகின்றனர். எனவே, பழமை வாய்ந்த இந்நிலம் மிகப்பழங்காலத்தே மக்கள் தன்பால் தோன்ற இடமளித்தது என்றால், அதில் தவறு ஒன்றும் இல்லை. இப்பழைய சமூகம் நாளாவட்டத்தில் அனுபவம் பெற்று நாகரிகத்துடன் வாழக் கற்றுக்கொண்டது. கூட்டங்கூடி வாழக் கற்றுக்கொண்டதே இத்தமிழ் நாகரிகத்தின் முதற்படி என்னலாம். தனித்தனி மனிதராக வாழ்கின்ற நாகரிகம் குறிஞ்சித் திணையில் என்றால், கூட்டங்கூடி வாழத்தொடங்குகையில் மருதத்திணை தோன்றலாயிற்று. கூட்டங்கூடினவுடன் புதுமுறை வாழ்வு மிகுந்தது என்று கூறலாம். தனித் தனியாக வாழும்பொழுது தனக்கெனவே வாழ்ந்த மனிதன், கூட்டங் கூடினவுடன் இந்நிலை மாறவேண்டுவதன் இன்றியமையாமையை உணரத் தலைப்பட்டான். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டிய நிலை நிற்பட்டவுடன் ஓரளவு இடர்ப்பாடுகளும் தோன்றலாயின. எவ்வளவு தூரம் தனி மனிதன் தன் உரிமையை இழக்கவேண்டும் என்ற வினாவிற்கு விடை காண்பதில் மனத்தாங்கல் நிகழ்வது இயற்கைதானே? இத்தகைய இக்கட்டான சந்தருப்பங்களில் மனத்தாங்கல் கொண்ட இருவரும் ஒரு பொது மனிதனிடம் தமது முறையீட்டைத் தெரிவிக்க வேண்டி நேரிட்டது. பலருஞ் சென்று முறையிடத் தகுந்த ஒருவனே தலைவன்.