பக்கம்:அகமும் புறமும்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 261


உடனே அரசன் அக்குழந்தைகளை விட்டுவிட்டான். அக்கால மன்னன் எவ்வளவு தன்னிச்சைப்படி நடக்கும் வன்மை பெற்றிருந்தான் என்பதைக் காட்டுவதற்காகவே இப்பாடல் காட்டப் பெற்றது. இத்தகைய அரசர் எங்கோ ஒருவர் இருவர் இருந்தனரேயன்றிப் பெரும்பான்மையோர் கடமை அறிந்து நடப்பவராகவே இருந்தனர்.

“பொலங் கழற் கால் புலர் சாந்தின்
விலங்கு அகன்ற வியல் மார்ப!” (புறம்-3)

“களிறு கடைஇய தாள்
கழல் உரீஇய திருந்தடி
.............................
மா மறுத்த மலர் மார்பு.” (புறம்-7)

(யானையைச் செலுத்தும் முயற்சியையும் வீரக் கழலணிந்த காலையும், திருமகள் பிறர் மார்பில் சென்று தங்க மறுக்கும் மார்பினையும் உடையவன்).

என்பன போன்ற பல புறப்பாடல்களில் மன்னன் மார்பு விரிந்தும் கல்போன்றும் இருக்கிறது என்று கூறுவது அவனுடைய வீரத்தைக் காட்டப் பயன்படுகிறது. ஆனால், ஓயாமல் சந்தனம் பூசிக்கொண்டிருக்கிறான் என்றும், திருமகள் தங்கிய மார்பென்றும், மகளிர் தோள் தோயும் மார்பு என்றும் கூறுவது ஏன்? மன்னன் வெறும் உடல் வீரம் மட்டும் உடையவனல்லன்; நல்ல பண்பட்ட வாழ்வுடையவன் என்றும் குறிப்பிடுகிறார் புலவர். மனித வாழ்வு சிறக்க வேண்டுமாயின், உடல் வீரத்தோடு முருகியல் சுவையும் வேண்டும். அழகிய பொருள்களில் ஈடுபட்டுத் தன்னை மறந்து அனுபவிக்கும் பண்பே முருகியல் சுவை எனப்படும். அத்தமிழ் மன்னர்கள் இம்முருகியல் சுவையைப் பெற்றிருந்தனர் என்பதையும் இக்குறிப்புகள் அறிவிக்கின்றன.