பக்கம்:அகமும் புறமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகம் – அகத்தின் அடிப்படை • 19


                       . . . .'வடிநாவின்
வல்லார் முன் சொல்வல்லேன்',

என்று எடுத்துரைக்கும்பொழுது அவன் கல்விப் பெருக்கம், கற்றன சொல்ல வல்ல ஆற்றல் என்பனவற்றையும் அறிய முடிகின்றது.

இம்மூன்று கருத்துக்களையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்பொழுது தலைவனுடைய முழு ஆளுமையும் (Personality) வெளிப்படக் காண்கிறோம்.

இதுவரை கூறியனவற்றைச் சுருக்கமாகக் கண்டால் சில உண்மைகள் தெற்றென விளங்கும். உலகின் பிற இடங்களில் வாழுகின்றவர்கள் காதலைப் பற்றிச் சிந்தித்த முறையில் இத் தமிழர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

ஆண் பெண் உறவின் அடிப்படையே காதல் என்று உலகில் வாழ்கின்ற பலரும் நினைத்திருந்த வேளையில் தமிழர் பலப்டி முன்சென்று காதல் என்பது ஒருவகை மனநிலை என்று கூறிப் போந்தனர்.

ஒரு தலைவனுக்கு அன்றாடம் எத்தனையோ பெண்களைப் பார்க்கின்ற வாய்ப்பு ஏற்படுகின்றது; இத்தகைய வாய்ப்பு தலைவிக்கும் உண்டாகலாம் எனினும் பார்க்கின்ற பெண்கள்பால் எல்லாம் இவன் மனம் செல்வதில்லை; தலைவிக்கும் இவ்வாறே.

இன்னும் சொல்லப்போனால் பல பெண்கள் ஒரே தலைவனைப் பார்க்கின்றனர். ஒருத்தி தவிர பிறர் எவர் மனத்திலும் எத்தகைய கிளர்ச்சியும் தோன்றுவதில்லை. கூட்டமாக இருக்கின்ற பெண்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே தலைவனை(யே)க் கண்டாலும் இவள் ஒருத்தி தவிர ஏனையோர்க்கு எவ்வித மனச் சலனமும் ஏற்படவில்லையாம்.