பக்கம்:அகமும் புறமும்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 273


உடலழகு

ஓயாது போரிடுதலில் மிக்க விருப்பம் உடையவர்களாய் இருந்தார்கள் தமிழ் மன்னர்கள் என்று நினைக்க ஆதாரங்கள் பல உள.

‘இடஞ்சிறிது என்னும் ஊக்கம் துரப்பப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாது.’ (புறம். 8)

என்பன போன்ற அடிகள் இவ்வரசர்களின் மனவெழுச்சியை அறிவிக்கின்றன. நெடுஞ்செழியன் ஓயாது போர் புரிந்து வாணாளைக் கழிப்பதைத் தடுத்து அவனை வாழ்க்கையை அனுபவிக்கச் செய்யவே ‘மதுரைக் காஞ்சி’ என்னும் மாபெருங்கவிதை தோன்றிற்று. மார்பிலும் முகத்திலும் புண்படுவதை விழுப்புண் என்று கூறுவர். அரசரும் வீரரும் இவ்விழுப்புண்களைப் பெற ஒருங்கே விரும்பினர். விழுப்புண் படாத நாட்களை வீணாளாகக் கருதுபவர் வீரர் எனக் குறள் கூறுகிறது. ஏனாதித் திருக்கிள்ளி என்பவனைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் என்ற புலவர் பாடிய பாடல் அந்நாள் அரசனின் உடல் அழகை எடுத்துக் காட்டுவதாய் உளது.

‘நீயே, அமர்காணின் அமர்கடந்துஅவர்
படைவிலக்கி எதிர்நிற்றலின்
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு
கேள்விக்கு இனியை கட்குஇன் னாயே.”’

(புறம். 167)

ஓயாமற் செய்த போர்களிற் பெற்ற விழுப்புண் காரணமாக இவனுடைய உடல் முழுதும் தழும்பு ஏறியிருத்தலின், கண்ணுக்கு அழகு அற்றவனாய் உள்ளான். ஆனால், மிக்க புகழ் படைத்திருத்தலின், கேள்விக்கு இனியவனாகவும் உள்ளான் என்பதே இப்பாட்டின் கருத்தாகும்.