பக்கம்:அகமும் புறமும்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286 • அகமும் புறமும்


“நசையுநர்த் தடையாநன்பெரு வாயில்”

(பொருநராற்றுப்படை 66,71)

என்றும்,

பொருநர்க்காயினும், புலவர்க்காயினும்,
கடவுள் மால்வரை கண்விடுத் தன்ன
அடையா வாயில் அவன் அருங்கடை குறுகி

(சிறுபாணாற்றுப்படை 203-6)

என்றும் வரும் அடிகள் பெரு நாளவைகளின் சிறப்பை அறிவிக்கின்றன.

ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்

அரசர்களைச் சுற்றியுள்ளவர்கள் ‘உழைவர்’ (பெருங். 4:13:23) என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றனர். ஐம்பெருங் குழுவும், எண்பேராயமும் இவ்வுழையர்கள் சேர்ந்தனவே. ஐம்பெருங்குழுவினுள் யார் யார் அமைவர் என்பது பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும் (சிலம்பு. 5:157) எனவரும் இடத்தில் அரும்பத உரையாசிரியர் இவர்களை “சாந்து, பூ, கச்சு, ஆடை, பாக்கு, இலை, கஞ்சுகம், நெல் ஆய்ந்த இவர் எண்மர் ஆயத்தார்” என்றும், “வேந்தர்க்கு மாசனம், பார்ப்பார், மருத்தர், வாழ்நிமித்தரோடு அமைச்சர் ஆசில் அவைக்களத்தார் ஐந்து” (சிலம்பு 5:157 குறிப்புரை) என்றும் குறிப்பிடுகிறார். ஆனால் அடியார்க்கு நல்லார், ‘அமைச்சர் புரோகிதர், சேனாபதியர், தவாத்தொழில் தூதுவர், சாரணர் என்றிவர், பார்த்திபர்க்கு ஐம்பெருங் குழுவெனப்படுமே என்றும், கரணத்தியலவர், கருமகாரர், கனகச் சுற்றம், கடை காப்பாளர், நகர மாந்தர், நளிபடைத் தலைவர், யானை வீரர், இவளி (குதிரை) மறவர், இணையர் எண்பேர் ஆயம் என்ப,’ (சிலம்பு. 5:157 உரைப்பகுதி) என்றும் கூறுகிறார்.