பக்கம்:அகமும் புறமும்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 287


இவ்விரு உரையாசிரியர் கூற்றையும் நோக்குமிடத்து அரசரைச் சுற்றி இருப்போர் காலாந்தரத்தில் மாறினர் என்று நினைக்க இடமுண்டு என்றாலும், அடியார்க்கு நல்லார் கூறினவர்களே அரசவையில் உடனிருந்து பங்கு கொள்ளத்தக்கவர்கள் என்று கூறல் பொருந்தும். சாந்து கொடுப்போர், பூக்கொடுப்போர் முதலியவர்கள் அரசவையில் இருக்கக்கூடிய தகுதியுடையவர்களா என்று ஆயுமிடத்து அடியார்க்கு நல்லார் கூறினவர்களே தகுதியுடையார் என்பது நன்கு விளங்கும். அரசவையில் இருப்போர் அரசனுடன் மந்திர ஆலோசனையில் ஈடுபடத் தகுதியுடையவராய் இருத்தல் வேண்டாவா? அமைச்சர் முதலானோருடன் பூத்தருவோரையும், உடை அணிவிப்போரையும் வைத்தெண்ணுதல் பொருத்தமுடையதாகப்படவில்லை. பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்யுமிடமும், பரிசிலர் முதல் வெளிநாட்டுத் துதுவர் வரை அனைவரையும் வரவேற்குமிடமும் இந்நாளோலக்கமேயாகும்.

பழந்தமிழ் மன்னர்களுடைய நாளோலக்கத்தை நாம் இன்றும் அறிய வாய்ப்பைத் தந்தது. அவர்கள் பரிசிலர்களையும் இவ்வோலக்கத்தில் அனுமதித்ததேயாகும். ஏனையோர் பலநாள் காத்திருந்தும் அரசனுடைய செவ்வி கிடைக்கப் பெறாமல் மனம் மறுகி இருக்கவும், பரிசிலர் மட்டும் யாதொரு விதமான தடையும் இன்றி உட்புகுதல் எத்தகைய செயல்? தமிழ் மன்னர்களுடைய மனநிலையை எடுத்துக்காட்ட இதைவிடச் சிறந்த செயல் வேறு யாது வேண்டும்?

‘செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே தப்புந பலவே,’

(புறம்–189)

என்று நக்கீரர் புறநானூற்றில் (189) கூறியதை இம்மன்னர்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டனர் போலும்! தமிழ் மன்னர்கள்,