311 • அகமும் புறமும்
–––––––––––––––––––––––––––––––––––––
கரும்புஅல்லது காடு அறியாப்
பெருந்தண்பனை பாழாக
ஏம நல்நாடு ஒள்எரி ஊட்டினை’.
[கரும்பு விளையும் விளைநிலங்களை எல்லாம் நெருப்பூட்டினாய்]
என வரும் அடிகள் நம் சிந்தனையைக் கிளறாமல் இருக்க முடியாது. இவ்வாறு இவர்கள் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடும் பொழுதுகூட தோற்றவரைப்பற்றி நினைத்ததில்லையா? அவர்களும் தம்மைப் போன்ற மொழி பேசும் ஒரே நாகரிகம் உடையவர் என்ற எண்ணம் இவ்வெற்றி வீரர்கட்கும் தோன்றி இராதா? போரில்லாத நாட்கள் மிகவும் குறைவு என்று கூறத்தக்க முறையில் இவர்கள் வாழ்ந்துள்ளனர். இப்பெரு மன்னர்கள் ஒரோவழி வாளாவிருந்தாலும், இவர்கட்குக் கீழ் வாழ்ந்த சிற்றரசர்கள் வாளாவிருப்பதில்லை. இவ்வாறு போரிட்டு மடியக் காரணம் யாது? படை வைத்திருந்தமையின் வாளாவிருக்க முடியாமல் ஓயாது போரிட்டனாரா?
போரிடக் காரணம்
புறப்பாடல்களை ஒரு முறை புரட்டினவருங்கூட ஓர் உண்மையை அறியாமல் இருத்தல் இயலாது. ஏனைய எத்துணைக் காரணங்கள் இருப்பினும், இவர்கள் ஓயாமல் பூசலிட்டதற்குத் தலையாய ஒரு காரணம் காணப்படுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் காணப்பெறும் இரண்டு உணர்ச்சிகளே இதன் காரணம் என்று நினைய வேண்டி உளது. இயற்கையாகத் தோன்றும் வெறுப்பு உணர்ச்சி ஒன்று; ஏனையது புகழ் ஈட்ட வேண்டும் என்று தோன்றும் உணர்ச்சி. இவை இரண்டும் கூடினவிடத்து விளைவது போரேயன்றி வேறு யாதாக இருத்தல் இயலும்?