பக்கம்:அகமும் புறமும்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340 • அகமும் புறமும்

பழி நீங்கின செயல் புரிவதே தலைமையுடையதாயிற்று. அடையும் பயனையே பெரிதாகக் கொண்டு, அதனை அடைய மேற்கொள்ளும்வழி பற்றிக் கவலை கொள்ளாமல் தொழிலாற்றுபவர் பலர் உண்டு. கருதிய பயனை அடைய எவ்வழியாயினும் சரியே என்று கருதும் கயவர்கள் அல்லர் இப்பழந்தமிழ் மக்கள். பயன் எத்துணைச் சிறப்புடையதோ, அத்துணைச் சிறப்பு வழியிலும் அமையவேண்டும் என்றே கருதினர். புகழ் என்பது இறுதியில் பெறும் பயனாகும். அதற்கு அடைமொழி கூறவந்த ஆசிரியர் ‘பழி ஒரீஇ’ என்று கூறுவாரேயாயின், அதனுடைய கருத்து யாது? புகழாகிய பயனை அடைய மேற்கொண்ட வழியும் பழியற்றது என்பதேயன்றோ?

பாய் புகழ்

இதனையடுத்துப் ‘பாய்புகழ் நிறைய’ வேண்டுமாம். புகழிற் சிறந்தது பாய்புகழ். பாய்புகழ் என்பதற்குப் பரந்த புகழ், விரிந்த புகழ் என்பதே பொருளாம். என்றோ ஒரு காலத்தில் புகழுடன் இருப்பவர் உண்டு. மேலும் சிறந்த செயல்கள் ஆற்றாமையின், அப்புகழும் அத்துடன் நின்று விடும். ஆனால், பரந்த புகழ் என்றமையின், மேலும் மேலும் நற்செயல்கள் புரிவதால் மேலும் விரிந்துகொண்டு செல்கிறதென்பதையும் புலவர் குறித்தாராயிற்று. பாய்புகழ் விரியுந் தன்மையுடையதாகலின் ஆழமின்றி அகலத்தில் மட்டும் பரந்துவிட்டதோ என்று எண்ணிவிட வேண்டா! பலராலும் அறிந்திருக்கப்படும் நிலை பாய்புகழ் எனப் பட்டால், மறவாமல் பல காலம் நினைக்கப்படுவதை நிறைதல் என்று கூறலாம். ‘பாய் புகழ் நிறைய’ என்று கவிஞர் கூறும்பொழுது பரந்தும் ஆழ்ந்தும் உள்ள புகழையே குறிக்கிறார்.