பக்கம்:அகமும் புறமும்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350 • அகமும் புறமும்

ஆராய்ந்தால் இவ்வாறு இவர்கள் கூறுவதன் காரணத்தை அறியலாம். இவர்கள் பசி தீர உண்பதையும் உறங்குவதையும் தவிர, வேறு வாழ்க்கையில் ஒன்றையும் அறியாதவர்கள் ஆகலின், இவர்கட்குப் பொழுது போவதில்லை.

வாழ்வில் வெறுப்பு

இங்ஙனம் தோன்றிய இவ்வெண்ணம் இம்மட்டோடு நிற்பதில்லை. ஒரு சிலர், ‘வாழ்க்கையில் வெறுப்படைந்தேன்!’ என்று எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்வதையும் காண்கிறோம். வாழ்க்கைப்போரில் ஓயாது சண்டை செய்து, இன்றியமையாத பொருள்களைக் கூடப் பெறமுடியாது வறுமையில் ஆழ்ந்து, அதன் பயனாக உயிரை மாய்த்துக்கொள்பவர்களும் உண்டு. இத்தகையோர் சாவிற்கு நமது இரக்கம் உரியதாகும்! குறை இவர்களிடம் இல்லை. இவர்கள் சாவிற்குக் காரணம், இவர்கள் தோன்றி வளர்ந்த சமுதாயமே ஆகும். இனி, ஒருசார் மக்கள், வாழ்க்கையில் பெற வேண்டுவன அனைத்தையும் பெற்று இருந்தும் வாழ்க்கையில் வெறுப்புத் தட்டித் தற்கொலை செய்துகொள்வதைக் காண்கிறோம். செல்வங்கொழிக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில், பணத்தில் புரளும் பெரும் பொருளாளர்களுட் சிலரும் இக்கதிக்கு ஆளானமையை அறிகிறோம். ஏன் இவர்கள் வாழ்க்கை இந் நிலைக்கு வந்தது? வாழ்க்கைக்கு, அதுவும் சுகமான வாழ்க்கைக்கு, எவை எவை தேவை என நினைப்போமோ, அவை அனைத்தும் இவர்களிடம் ஒன்றுக்கு நூறாய் இருப்பவும், வாழ்க்கையில் வெறுப்புத்தட்டக் காரணம் என்ன? இவற்றிலிருந்து நாம் அறிய வேண்டுவது ஒன்றுளது. வாழ்க்கையில் ஏற்படும் விருப்பும் வெறுப்பும் வாழும் மனிதனுடைய மனநிலையைப் பொறுத்தனவே தவிர, ஏனைய உலகப் பொருள்களைப் பொறுத்தவை அல்ல.