தமிழர் கண்ட உண்மைகள் • 355
–––––––––––––––––––––––––––––––––––––
அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுபவர்கள் உலகம் ஆதிசேடன் தாங்கிக்கொண்டிருத்தலினாலேதான் நிலைபெற்றிருக்கிறது என்பர்.
எது உலகம்?
மேலே கூறிய விடைகள் அனைத்திலும் ஓரளவு மெய்ம்மை இருக்கிறது. ஆனாலும் முழு மெய்ம்மையா என்றால், இல்லையென்றுதான் கூறவேண்டும். மேலும், உலகமாகிய சடப்பொருள் நிலைபெறும் காரணத்தைத் தான் இவ்விடைகள் ஒருவாறு விளக்கின. ஆனால் உலகத்தை மண்ணும், நீரும், நெருப்பும், காற்றும் கலந்த ஒரு ஜடப் பொருளாக மட்டும் தமிழர்கள் கருதவில்லை. உலகம் என்ற சொல்லால் உலகில் உள்ள மக்களையே இவர்கள் குறித்தார்கள். இது பற்றியே போலும், ‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று,’ என்பது போன்ற முதுமொழிகள் தோன்றலாயின! எனவே, உலகம் என்பது மக்களைத்தான் சுட்டும் என்ற கருத்துடன் மேலே கூறிய வினாக்களை எழுப்பினால், கூறப்பட்ட விடைகள் பொருத்தமற்றவை என்பது நன்கு விளங்கும்.
தமிழர் கண்ட இந்த உண்மை இன்றும் ஒத்துக் கொள்ளப் பெறுகின்றது என்பதற்குச் சான்றாக ‘உலகம் வரவரக் கெட்டுப்போய் விட்டது!’ என்று கூறப்படும் வாக்கியத்தைக் கூறலாம். உலகம் என்பது அதில் வாழும் மக்களைக் குறிக்கிறது என்பது வெளிப்படை அவ்வாறாயின், இந்த உலகம் ஏன் வாழ்கிறது?
நாகரிகம் வளர்ந்த வரலாறு
உலகம் தோன்றிய நாளில் அதில் மனிதன் தோன்றவில்லை. பல நூறாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பே மனிதன் தோன்றி வளரத் தலைப்பட்டான் என்று நிலநூல்