பக்கம்:அகமும் புறமும்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364 • அகமும் புறமும்

அத்தகையவர்களிடத்தும் வாய் கூசாமல் கேட்டால்தான் நாம் விரும்பியது கிடைக்கும். எனவே, நம் காலத்தில் ஒருவரை ஒன்று கொடு என்று கேட்பது தவறு அன்று என்று கருதப்பட்டாலும், அந்நாளைய தமிழன் இதனை மிக இழிந்ததாகவே கருதினான்.

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

(புறம்–204)

என்று இந்நான்கு அடிகளில் இற்றைநாள் தமிழ்ச் சமுதாயம் இழந்துவிட்ட ஒரு நாகரிகம் பேசப்படுகிறது. உலகத்தில் எவ்வாறேனும் வாழ்ந்துவிட வேண்டும் என்ற கருத்தால் தனக்கு மிகவும் வேண்டப்படுவதாக ஒன்றைக் கருதிக்கொள்கிறான் ஒருவன். அது இல்லாவிடின் உயிர் வாழ முடியாது என்ற நிலை வந்துவிடுகிறது. உயிரைப் பெரிது என்று மதிக்கும் ஒரு காரணத்தால் எப்படியாவது வாழ வேண்டும் என்று நினைக்கிறான். இத்தகையவன் தனக்கு மிகவும் தேவை என்று கருதப்படும் பொருளை அது உடையான் ஒருவனிடமிருந்து வேண்டிப் பெற முயல்கிறான். அப்பொருளை உடையானும், இந்த இல்லானும் சமமாக இருப்பின் அவனை நோக்கி இவன், ‘தா’ என்று கேட்கலாம். ஆனால், உடையான் உயர்ந்தவனாய் இருப்பின், அவனிடம் சென்று ‘ஈவாயாக!’ என்றுதானே கேட்க வேண்டும்? மானத்தைவிட்டு ஒரு பொருளை ஈ என்று கேட்டலினும் இழிந்தது வேறு இல்லை என்கிறார். மானம் என்ற ஒன்றை மிகப் பெரிதாக மதிக்கும் அற்றை நாள் தமிழ்ப் புலவர். பசுமாடு ஒன்று உயிர் நீங்கும் நிலையில் இருக்கிறது. சிறிது தண்ணீர் இருந்தால் அது உயிர் பிழைத்துவிடும். பசுவைக் காப்பது அறமாகும். வேண்டப்படும் பொருளோ, எங்கும் எப்பொழுதும்