பக்கம்:அகமும் புறமும்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட உண்மைகள் • 365

கிடைக்கக்கூடிய தண்ணீர்தான். என்றாலும், அந்தத் தண்ணீரை ஒருவனிடம் சென்று ‘தருக’ என்று கேட்பதில் மானம் போய்விடுவதாகக் கருதினர் அற்றை நாள் தமிழர்.

ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்.

(குறள்–1066)

இரத்தலின் இழிவு இத்தகையது என்று பேசிய தமிழ்ப் புலவர், இதனுடன் நிற்கவில்லை; இதனினும் இழிந்த ஒன்றும் உண்டு என்கிறார். இவ்வாறு மானத்தை இழந்தும் ஒருவன் ஒரு பொருளைத் ‘தா’ என்று கேட்டு விடுகின்றான். அவ்வாறு கேட்பவன் எதிரே அக்கேட்கப்பட்ட பொருளை இல்லை என்று கூறுதல், கேட்டலினும் மிகவும் இழிந்ததாம். கேட்பதே இழிவு எனில், கேட்டதை இல்லை என்று உரைத்தல் அதனினும் இழிந்ததாம். இழிந்தது பற்றி ஆராய்ந்த தமிழர் உயர்ந்தது பற்றியும் அடுத்துப் பேசுகிறார்.

உயர்ந்தது எது?

ஒருவன் எதிரே நின்று ஒன்றைத் தருக என்று கேட்பதன் முன்னர், நிற்போன் குறிப்பை அறிந்து, இதனைப் பெற்றுக் கொள்க என்று தருதல் உயர்ந்ததாம்; அவ்வாறு கேளாமாலும் தரப்படுகின்ற ஒன்றை வேண்டா என்று மறுத்துவிடுதல் தருதலைக்காட்டிலும் உயர்ந்ததாம். ஒருவருக்கு ஒன்றைத் தருதல் என்பது அவ்வளவு எளிதான செயல் அன்று. அவ்வாறு தருவதிலும், அதனைப் பெறுபவர் மனம் நோவாமலும் இதனைப் பெற வேண்டியுளதே என்று வருந்தாமலும் இருக்கும்படிச் செய்து ஒன்றைத் தருதல் ஒரு கலையாகும். இவ்வாறு தருபவரே மூன்றாம் அடியில் குறிக்கப்படுகின்றனர். இவரினும் மேம்பட்டவர், தானே வருகிற ஒன்றை வேண்டா என்று