பக்கம்:அகமும் புறமும்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட உண்மைகள் • 367

முடியாதுதான். என்றால், பிறர் அனைவரையும் சோதரர் என்றே கருதவேண்டும் என்று கூறுவது பொருளற்ற சொல்லாய் முடிந்துவிடும். இன்று நம்மைச் சுற்றி நிகழ்வது யாது? கறுப்பனை வெள்ளையன் தோலின்நிற வேறுபாட்டால் வெறுக்கிறான். பணக்காரனை ஏழை வெறுக்கிறான். பொருள்களை உற்பத்தி செய்பவன் அதனை வாங்காதவனை வெறுக்கிறான். ஒரு வகை அரசியல் முறை உள்ளவன் பிறிதோர் ஆட்சி முறையுடையவனை முழுப்பகைவனாகக் கருதுகிறான். இன்னமும் கூறப்போனால், தம்மைப் போல் எல்லா வகையிலும், நினைக்காமல் வேறு வகையில் நினைக்கிறவர்களைக்கூடப் பகைவர்கள் என்றே சில நாட்டார் கருதுகின்றனர். இத்தனை வெறுப்புக்களிடையே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கூறுதல் பொருந்துமா? அல்லது எடுபடுமா? இவற்றை எல்லாம் மனத்தில் நினைத்த ‘கணியன் பூங்குன்றனார்’ என்ற அந்தத் தமிழ்ப் புலவர் இவற்றிற்குச் சமாதானம் கூறுகிறார்.

ஒருவன் மற்றொருவன்மேல் எப்பொழுது வெறுப்புக் கொள்கிறான்? தனக்குத் தீங்கு இழைத்துவிட்டான் என்று நினைத்தால்தானே வெறுப்புத் தோன்றும்? அவ்வாறு நினையாமல் மற்றொருவன் தனக்குத் தீமையோ நன்மையோ செய்ய முடியாது என்று நினைத்தால், வெறுப்புக்கொள்ள வாய்ப்பே இல்லையன்றோ?

இதனாலேதான் அந்தப் புலவர் பாடலின் இரண்டாம் அடியிலேயே ‘தீதும் நன்றும் பிறர் தர வருவன அல்ல’ என்கிறார். ‘ஒருவன் நேரே நம்மைத் தாக்கும்பொழுது கண் எதிரே நமக்கு ஊறு விளைப்பவனைக் காண்கிறோமே! அப்பொழுதும் அவனை வெறுக்கக் கூடாதா?’ என்பாருக்கு விடை கூறுமுகமாக மூன்றாம் அடியில், ‘உடலில் படும் துன்பம் நீடித்து நிற்பதில்லை. எனவே, அதனால் வெறுப்புக்கொள்ள வேண்டா’ என்கிறார். ‘ஒரு வேளை பிறன் ஒருவன் நம்மைக்