பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


2

மாபெரும் அக்டோபர் புரட்சியும், அதன் பிறகும்

எனவேதான் 1917 ஆம் ஆண்டின் மாபெரும் அக்டோபர் புரட்சி வெற்றி பெற்றவுடனேயே, பல மொழி பேசும் பாரத நாட்டைச் சேர்ந்த கவிஞர்கள் அனைவரிலும், அப் புரட்சியை முதன் முதலில் வாழ்த்தி வரவேற்றுப் பாடிய கவிஞராகத் திகழ்ந்தார் பாரதி. 'புதிய ருஷ்யா' என்ற தமது அற்புதமான அமரகவிதையில், அவர் அந்தப் புரட்சியை இவ்வாறு வாழ்த்தினார்:

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்தது பார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்.
அடிமைக்குத் தளையில்லை, யாரும் இப்போது
அடிமையில்லை அறிக என்றார்.
இடிபட்ட சுவர் போல கலிவிழுந்தான்,
கிருத யுகம் எழுக மாதோ!

இதே கவிதையின் தொடக்கத்தில், அவர் அந்தப் புரட்சியை "ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி" என்று கூறி, "வையகத்தீர், புதுமை காணீர்" என்று உலகினரையும் அறைகூவி அழைத்து அதனைக் காணுமாறு கூறினார். எனவே அவர் மனிதகுலத்துக்கு ஒரு புதிய யுகத்தைக் கொண்டு வந்த அந்தப் புரட்சியின் உலக முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந்தார் என்பது தெளிவு.

எனினும், பாரதியின் கவிதைகள் வெளிவந்ததைக் குறித்து நமக்குக் கிடைத்துள்ள தகவல்களையெல்லாம் கொண்டு பார்க்கும் போது, அக்டோபர் புரட்சியைப் பற்றிய பாரதியின் இந்த அமர கவிதை அந்நாளில் பிரிட்டிஷ்

11