பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழக்கறிஞராக இருந்த சிங்காரவேலர் தேசத்தின் அழைப்புக்குச் செவி சாய்த்து, தமது வழக்கறிஞர் தொழிலைத் துறந்தார்; இருபதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் அவர் இருந்தார் . அ. இ. காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் என்ற முறையில் அவர் 1922-ல் கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்துக்குச் சென்று, அங்கு பூரண சுதந்திரம் பற்றிய ஒரு தீர்மானத்தையும் பிரேரேபித்தார்; தொழிலாளர் நலம் பற்றிய தீர்மானம் பற்றியும் பேசினார்; "காங்கிரஸ்காரர்களுக்கான புதிய பிரகடனம்" என்ற அறிக்கையையும் அங்கு சுற்றுக்கு விட்டார். 1923 மே மாதத்தில் இந்தியாவில் முதன்முதலாக நடந்த மே தினக் கூட்டம் அவரது தலைமையில் சென்னையில் நடந்தது. அக்கூட்டத்தில் அவர் இந்துஸ்தான் தொழிலாளர் - விவசாயிகள் கட்சியின் (Labour Kisan Party of Hindustan) உதயத்தை அறிவித்தார்; அதன் அறிக்கையை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்டார். கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக நடந்த கான்பூர் சதி வழக்கின்போது, அவருக்கு எதிராகவும் ஒரு கைது - வாரண்ட் இருந்தது. ஆனால் அவரது உடல் நலக்குறைவு காரணமாக அந்த வாரண்ட் அமல் நடத்தப்படவில்லை; பின்னர் அது ரத்தும் ஆகிவிட்டது. 1925-ல் அவர் கான்பூரில் நடந்த முதல் கம்யூனிஸ்டு மாநாட்டுக்குத் தலைமை வகித்து, அதன் தொடக்கவுரையை நிகழ்த்தினார். 1923 இறுதியில் அவர் தம்மீது வாரண்ட் பிறப்பிக்கப்படும் வரையிலும் லேபர் அண்டு கிஸான் கெஜட் என்ற ஆங்கில மாதமிருமுறைப் பத்திரிகையை வெளியிட்டு வந்தார்; இருபதாம் ஆண்டுகளிலும் முப்பதாம் ஆண்டுகளிலும் அவர் தொழிலாளி என்ற தமது வாரப்பத்திரிகை உட்பட பல தமிழ்ப் பத்திரிகைகளை வெளியிட்டு வந்தார்; அல்லது அவற்றோடு சம்பந்தப்பட்டிருந்தார்.

முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில், அவர் சுயமரியாதை இயக்கத்தின் தலைவரான பெரியார் ஈ.வே.ராமசாமியோடு தொடர்பு கொண்டு, சுய மரியாதை

29