பக்கம்:அங்கும் இங்கும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பள்ளிகளும் எங்குமுண்டு, சோவியத் ஒன்றியத்தில்; ஏராளமாக உண்டு. அவற்றில் சேர்ந்து, தொடர் கல்விப் பயன்பெறும் தொழிலாளர்கள். அலுவலர்கள், பட்டதாரிகள் இலட்சக்கணக்கினர். இந்த ஈடுபாட்டில் ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்லர் பெண்கள். முதியோர் கல்வி பெறும் -எழுத்தறிவல்ல-தொடர் கல்வி பெறும், எண்ணற்ற மாதர்களில் நாற்பது பேரையே நாங்கள் தாஷ்கண்ட் இரவுக் கல்லூரியில் கண்டோம்; ஜெர்மானிய மொழி கற்கும்போது கண்டோம்.

மூன்று வாரங்களுக்குப் பின் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். தமிழ்நாட்டில் பொறுப்புள்ள பணியொன்றில் இருந்த இரஷியர் ஒருவரைக் கண்டேன். அவருக்கு வயது அறுபதுக்கு அருகில். அவர் பொருளாதாரத் துறையில் டாக்டர் நிலைக்குப் பட்டம் பெற்றவர். அவர் கௌரவ டாக்டர் அல்லர். படித்துத் தேறிப் பட்டம் பெற்றவர். அவர் ஆதியில்-அதாவது இளமைப் பருவத்தில்-படித்து முடித்தது எவ்வளவு ? நான்காம் வகுப்பு வரையில், ஜார் ஆட்சிக் காலத்தில், ஏழ்மை காரணமாக, நான்காவதோடு நின்றுவிட்ட அவர் சோவியத் ஆட்சிக் காலத்தில், மீண்டும் வேளைப் பள்ளியில் சேர்ந்தார். பள்ளியிறுதி தேறியதும் வேளைக் கல்லூரியில் சேர்ந்து முதற் பட்டம் பெற்றார். ஊக்கம் அதிகமாயிற்று. 'டாக்டர்’ பட்டத்திற்கும் வேளைக் கல்லூரியிலேயே படித்தார். பொருளியல் மேதையாகத் தமிழ்நாட்டிற்கு வந்தார்.

'கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு!' இது நான் கற்ற தமிழ்ப் பாடம் ; நாட்டு மக்களிடமிருந்து ஒளிக்கும் பார்க்கும் பாடம்.

'யாதானும் நாடாமால் ஊராமால், என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு’- இது தமிழ் மறை; நம் மறை; இதை ஒத யாருக்கு உரிமையுண்டு? 'இளமையிலும் இதோ(