பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏழாம் ஸ்தம்ப சாஸனம்

145

வேறன்று. என் புத்திரரும் பௌத்திரரும் அவர் பின்வரும் சந்ததியார் எல்லாரும் இதைப் பின்பற்றுவதற்கும் எனது நோக்கம் சந்திரசூரியர் உள்ளவரையில் நிலை நிற்பதற்கும் இச்சாஸனம் எழுதப்பட்டது. இப்படி அவர்கள் என் கருத்தைக் காப்பாற்றுவாரானால் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் சுகம் கிடைப்பது நிச்சயம். நான் முடிசூடி இருபத்தேழு வருடங்களுக்குப்பின் இந்தத் தர்மலிகிதம் வரையப்பட்டது.

X. இதைப் பற்றி தேவர் பிரியன் சொல்லுகிறான். எங்கெங்கெல்லாம் ஸ்தம்பங்கள் அல்லது பாறைகள் இருக்கின்றனவோ அங்கங்கெல்லாம் இந்தத் தர்மலிகிதத்தை என்றென்றைக்கும் நிலை நிற்கும்வண்ணம் எழுதவேண்டும்4.

41 வாக்கியங்கள். இம்மொழிபெயர்ப்பு மூலத்தை வாக்கியம் வாக்கியமாக அனுசரிக்கவில்லை.

(1) கோசம்' அல்லது குரோசம் ஒரு யோஜனை தூரத்தின் கால்பாகம். ஒரு யோஜனை கிட்டத்தட்ட எட்டு மைல், அதனால் ஒரு கோசம் இரண்டு மைல். அரைக்கோசத்துக்கு ஒரு கல் வீதம் ஒவ்வொரு மைலுக்கும் ஒருகல் ஆகிறது.

(2) ஆபான. தண்ணீர்பந்தல்.

(3) நிலபதி, விஜ்ஹதி, என்பதற்கு கண்ணோட்டம், மன்னிப் பளித்தல், என்று பொருள் கூறலாம். இச்சொல்லின் வினை உருபுகளை நான்காம் ஸ்தம்ப சாஸனத்தின் உரையில் குறிப்பிட்டிருக்கிறோம்.

(4) அசோகன் காலத்தில் இந்த சாஸனத்துக்குப் பலபிரதிகள் இருந்திருக்க வேண்டுமென்று இதிலிருந்து தெளிவாகின்றது.

10