பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

அசோகனுடைய சாஸனங்கள்

களும், குத்தக நிகாயத்தில் அடங்கிய பதினைந்து நூல்களும், அபிதர்ம பிடகத்தில் அடங்கிய ஏழு நூல்களும் சேர்ந்து இருபத்தொன்பது கிரந்தங்களாகின்றன. இவற்றைத் தென் பௌத்தர்களுடைய திருமறை என்று கூறுதல் தகும். வடக்கிலுள்ள பௌத்தர்களிடத்தில் இந் நூல்கள் யாவும் கிடையா. இங்குக் காணப்படாத வேறு பல நூல்களும் அவர்களிடம் இருக்கின்றன. இவை பல வெகு மேன்மையானவை யென்றாலும் அசோகனுக்குப் பிற்காலத்தில் உண்டானவை. இலங்கை, பர்மா முதலிய தென் பௌத்த நாடுகளிலும் பிடகங்களில் அடங்கிய நூல்களுக்கு உரையாகவும் வியாக்கியானமாகவும் சங்கிரகமாகவும் மற்றும் பல நூல்கள் பாலிபாஷையில் ஏற்பட்டன. மொத்தமாக பௌத்தமத நூல்கள் எவ்வளவு என்பதைக் கூறுதலும் எளிதல்ல.

அசோகனுடைய சகோதரனான மஹேந்திரனும் சகோதரி சங்கமித்திரையும் சேர்ந்து போதி விருக்ஷத்தின் கிளையை சிங்களத்திற் கொண்டுபோய் நாட்டியதை விட முக்கியமான செய்தி உலகசரித்திரத்தில் இல்லை. இதுவே, தற்காலத்தோருக்கும் எதிர்காலத்தோருக்கும் உபயோகப்படுமாறு முற்காலத்திய பௌத்த சமய நூல்கள் ஏடுகளிற் பதிந்து காப்பாற்றப்பட்டதற்கு ஏதுவாயிற்று, பலகாரணங்களால் இந்துஸ்தானத்தின் போதி விருக்ஷம் செழித்து வளரவில்லை. உபநிஷத்துகள் என்ற உயர் மரங்களின் அடர்ந்த நிழலானது அவற்றின் அடியில் தோன்றிய போதிமரத்தைச் செழித்து வளரவிடவில்லைபோலும், தென் தீவில் நாட்டப்பெற்ற விருக்ஷமோ, தழைத்து ஓங்கி வளர்ந்து தனது தாயாகிய இந்துஸ்தானத்துப் போதி விருக்ஷம் க்ஷணதசை அடைந்த காலத்தில் அவளுக்குப் பக்கபலமாயிருந்து, இன்னும் பல