பக்கம்:அஞ்சலி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114 லா. ச. ராமாமிருதம்

“அண்ணன் அன்னி ராவுலே சாப்பாட்டுக்குக் குந்தறப்போ, என்னைப் பக்கத்துலே கையாலே தனக்குத் துணையாட்டம் அணைச்சுக்கிட்டு சொல்லிச்சு: “நான் இன்னிக்கு கொண்டைசேவல் கூவுற வேளைக்கு ஒரு கனவு கண்டேன். கப்பு வாசலுக்குக் குறுக்கே படுத்துக்கிட்டு குளம்பாலே என்னைத் தட்டித் தட்டி, போவமாட்டேன்னு தலையை ஆட்டுது. சனியன் கனவுலேகூட வந்து கஸ்டத்தைக் கொடுக்குது!-”

முதலியார் பெரிதாய் இரண்டு பெருமூச்சுக்கள் விட்டார். சேர்ந்தாற்போல் ஒரே நிலையில் கொஞ்ச் நேரம் உட்கார்ந்திருப்பதுகூட அவர் பருமனுக்கு சிரமந்தான்.

ஆனால் தேகந்தான் பருமனேயொழிய மூளை, மாத்திரம் சிட்டுக் குருவி.

பாம்பு மிட்டாய் பம்பாய் மிட்டாய்
தேளு மிட்டாய் பாலு மிட்டாய்
கூடை மிட்டாய் குண்டு மிட்டாய்
தம்பிடிக்கு ஒண்ணுதான் வாயிலே
போட்டா தண்ணிதான்......

என்று பாடிக்கொண்டு போகும் மிட்டாய்க்காரனைப் போல், எதிராளி பேசிக்கொண்டிருக்கையிலேயே, ஒரொரு வார்த்தையிலும், சில சமயங்களில் ஒசைகளிலிருந்துகூட சூட்சுமமான பாகுகளை இழுத்து விசித்திரமான வேலைப்பாடுகள் உடைய சிந்தனைக் கோலங்களை யும், கூடுகளையும் அவர் எண்ணம் முடைந்துவிடும்.

இந்த உலகத்துலே ஆதாரமில்லாதது எது? கனவுகளையும் கூட்டித்தான், சம்பந்தமில்லாமலா கனவு வரும்? கனவெல்லாம் கனவா? சிலந்தி தன் உடம்பிலே சரசரன்னு இழையைக் கறந்துகிட்டே கீழிறங்கி அந்தரத்துலே தொங்குது. ஓணானாட்டம் உயர ஏறுது, அசப்பிலே நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/124&oldid=1025252" இலிருந்து மீள்விக்கப்பட்டது