பக்கம்:அஞ்சலி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 127

“அந்த ஆளை எங்க பார்த்திருக்கோம்?” பூரணி கண்னை மூடிக்கொண்டு, மங்கிக்கொண்டிருக்கும் நினைவைக் கூட்ட முயன்றாள்.

“ஆ..இப்போ நெனப்பு வருது.

“அன்னிக்குக் காவாய் தாண்டி, காத்தடிச்சு ஒரு மரம் விளுந்திச்சுன்னு, அதுலே கப்பும் கிளையுமா அடுப்புக்கு எல்லாரும் ஒடிச்சிட்டுப் போனாங்களேன்னு நானும் போனேனே. ஆனா, நாம் போன வேளைக்கு எல்லாரும் மரத்தை மொட்டையடிச்சுட்டாங்க. கிளங்காட்டம் அடி. மரம்தான் மிச்சம். கோடாலி போட்டுத்தான் வெட்டணும்.

“அந்த மரத்துமேலே, கீளே காத்தடிச்சா விளுந்துடற மாதிரி, தட்டுக்கேடா குந்திட்டு பொய்ஸ்தவத்தை, மொவத்துக்கு நெருக்கமா புடிச்சிட்டு இந்த ஆளு தன் நெனைப்பு மறந்து படிச்சுட்டிருந்தான்.”

“வெளியூராளு. இந்த ஊர் மொவம் இல்லே. நம்ம ஜாதிகூட இல்லே. வெய்யில்லே மூஞ்சித் தோல் வயளும் போல, ரத்தம் அப்படி நெத்தியிலும் கன்னத்துலேயும் கன்னிப்போச்சு, மயிர் செம்மண்ணாட்டம் ஜெவப்பா ஜொலிக்குது. அவன் வார்ததையே வாயிலே மென்னு ருசிகூட்டி முழுங்கறது. ரொம்ப ரொம்ப வேடிக்கையா இருந்திச்சு. என்னையறியாமே வாய்விட்டு சிரிச்சுட்டேன்.”

“சிரிச்சா என்ன?” நான் நாணங்கெட்டுப் பூட்டேன்னு சொல்ல என்னைவிடப் பெரிய ஆம்புள்ளையா? நிச்சயமா எனக்கு ஏளு எட்டு வருசம் பிந்தித்தான் பொறந்திருப்பான். நான் மூணு பெத்தப்புறமும் இன்னும் சமைஞ்ச பொண்ணாட்டம் நடுவூட்டுலே குந்திட்டிருக்க முடியுமா? வீட்டு வேலை ஆவறது எப்படி?

“இல்லே, முன்னுது பின்னுதெல்லாம் யோசனை பண்ணுட்டுதான் சிரிப்பு வருதா? என்னமோ வந்தது சிரிப்பு! சிரிச்சேன். அட போயேன்!......”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/137&oldid=1033457" இலிருந்து மீள்விக்கப்பட்டது