பக்கம்:அஞ்சலி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 139

அன்னிக்கு வெள்ளிக்கிழமை காலையிலே பத்து வீடு தாண்டி பட்டணத்தாள் இறந்துட்டா. அவ புருசன் மூணு நாளைக்கு முன்னாலேயே, தேங்காய் ஒடைச்சு கற்பூரத்தைக் கொளுத்திட்டான். ஆனால், நெஞ்சுலே உசிரைப் புடிச்சுகிட்டு, நல்ல நாளைக்கு நல்ல வேளைக்குக் காத்திட்டு இருந்தா.

காலையிலிருந்தே பல்லக்கு ஜோடனை ஆவுது. எல்லாரும் அவங்க வீட்டுலே பூந்து பூந்து புறப்படறாங்க. பட்டினத்தாள் பச்சைப் பொண்ணு; எப்பவும் சிரிச்ச மொவம். கஷ்டமே கண்டுக்க மாட்டா. கொடுத்துவெச்ச மனுசி, குளிகுளிச்சு, சுல்லாட்டம் புள்ளையெ பெத்து புருசன் கையிலே கொடுத்துட்டு தான் வந்த வழிக்குப் போறா.

சாயங்காலம் ஆய்ப்போச்சு. பல்லாக்கு சாமியாட்டம் புறப்படுது, பாண்டும் தாரையும் தப்பட்டை விளக்குமா.

பட்டினத்தாள் புதுசு உடுத்தி பூமெத்தை மேலே சிரிச்ச மொவத்திலே பத்தின மஞ்சளோடே வாயிலே அடைச்ச வெத்தலை உதட்டுலே ஒழுவ, தூக்கிவரா. முன்னாலே அவ புருசன் துட்டை வாரியிறைச்சுட்டே போறான். பின்னாலே அவள் அம்மா கதறிக்கிட்டே பசு வாட்டம் துரத்திக்கிட்டே வரா. அவளை நாலு ஆம்புள்ளே கட்டிப்பிடிச்சும் மாளல்லே. பெத்த வயிறு இல்லியா? அந்தந்த வீட்டுத் திண்ணைலே பேச்சுப் பராக்கிலே குந்தியிருந்தவங்க எல்லாம் அவசர அவசரமா எழுந்து நிக்கிறாங்க.

ஆனா இந்தச் சாமியார் நம் வீட்டுத் திண்ணையிலே கால்மேலே காலைப் போட்டு ஒக்காந்திருக்கிற அதிகாரத்துலே கடுவுகூட கலையல்லே.

“ஐயோ என் கப்பல் கவுந்துபோச்சே! ஐயோ என் கப்பல் கவுந்துபோச்சே”ன்னு பெத்தவ கத்தீட்டே வரா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/149&oldid=1033463" இலிருந்து மீள்விக்கப்பட்டது