பக்கம்:அஞ்சலி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154 லா. ச. ராமாமிருதம்

அவன் ‘மோகினி’ யென்றதுமே கறுப்புடுத்தி ஒரு உருவம் என் கண்முன் எழுந்தது. கறுப்புப் புடவையோரத்தில் வெள்ளி ஜரிகை.

சட்டெனச் சின்னான் பேச்சில் எனக்கு அலுப்புத் தட்டிற்று. அவனைப் ‘போ’ என்றுகூடச் சொல்லாமல், தலையணையில் சாய்ந்தேன். குழந்தை மூச்சுப் போன்று மெலிந்த காற்று இமையோரங்களுள் புகுந்து விழிகள் குளிர்ந்தன.

அப்போது குழந்தையடிகளில் கொஞ்சும் சதங்கை போல், தந்தி நாதங்கள் திருட்டுத்தனமாய் அடிமேல் அடிவைத்து ஒன்றன்பின் ஒன்றாய் நயத்துடன் துளித்துக் கொண்டே செவிவழி புகுந்து என் உள்மார்பில் பாகாய் வழிந்தன. நான் கட்டிலிலிருந்து இறங்கினேன். நாதங்கள் அழைத்த வழியே பின்தொடர்ந்து சென்றேன்.

அறையில் அம்மா விளக்கைக்கூடப் போட்டுக் கொள்ளவில்லை. மங்கி மறையும் அந்தி வெளிச்சத்தில் அவள் உருவக் கோடுகள் மாத்திரம், மாலைக் காற்று தன்னில் தானே ஸன்னமாய் எழுதிக்கொண்ட சித்திரம் மாதிரித் தெரிந்தன. குனிந்த தலையுடன் தன் வாசிப்பில் லயித்திருந்தாள்.

அவள் வாசிப்பில் கீர்த்தனையின் அடையாளமோ, தீர்மானமாய் ராக ரூபமோ தெரியவில்லை. அவள் சிந்தனையின் அருவிதான் புறப்பட்டுக் கொண்டிருந்தது. ஸ்திரமற்று வளைந்து வளைந்து, தங்கித் தயங்கித் தளர்ந்து வளர்ந்து கொண்டிருந்தது. சிறு அரவத்திலும் காற்றிலே கரைந்துவிடுவாள் போன்று அம்மா உருவம், அந்த நிலையில் அவ்வளவு நளினமாயிருந்தது.

அம்மா என்னைப் பார்த்தாள். என்னைப் பார்த்ததும் அவள் முகத்தின் மலர்ச்சியை இருட்டில் நான் காணமுடியவில்லை. ஆயினும் அவள் உள்ளுவகையின் மணம் என்மேல் அலை மோதிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/164&oldid=1033471" இலிருந்து மீள்விக்கப்பட்டது