பக்கம்:அஞ்சலி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 155

உள்ளே வந்து உட்கார்ந்தேன். அம்மா பெருமூச் செறிந்தாள். மன நிறைவின் அசதியோ? ஏனோ தெரியவில்லை, வீணையைக் கீழே இறக்கினாள். ஆனால், அந்த வேளையின் சுருதி கலையவில்லை. அதைக் கலையாமல் காப்பதற்குத்தானோ, அவள் விரல்கள் மாத்திரம் தந்திகளைச் சுண்டிக் கொண்டிருந்தன. நாதலாகிரி எங்களைச் சூழ்ந்தது.

“அம்மா...”

“அம்மா, சப்தங்கள் மகரந்தப் பொடிகள், காற்றிலே மிதந்து வந்து என்னை இங்கே இழுத்தன” என்றேன்.

அவள் கண்கள் கீழே விழாத கண்ணீரில் பளபளத்தாற்போல் எனக்குத் தோன்றிற்று. இடக்கையால் என்னைத் தன்பக்கம் இழுத்து அணைத்துக்கொண்டாள். வலக்கை தந்தியை மீட்டியபடி இருந்தது. நான் ஒரே பிள்ளை. செல்லப்பிள்ளை. எப்பவும் அவள் குழந்தை.

“அம்மா நீ என்ன வாசிக்கிறாய்?”

“நான் என்னத்தைக் கண்டேன்?” கையை விரித்தாள். “வாசிக்கணும்போல் தோணித்து வாசிக்கிறேன். இன்னிக்குத்தான் கை ஒழிஞ்சுது.”

“அம்மா நீ வாசித்து ரொம்ப நாளாயிற்று.”

“அம்மா யோசனையாய், தந்திகளடியில் தங்கியிருப்பதாய் நினைத்துக்கொண்ட புழுதியை ஊதினாள். அந்த வீணையை அம்மா தன் கலியான வரிசைகளுடன் தன் பிறந்தகத்திலிருந்து கொண்டுவந்திருந்தாள். அவள் தகப்பனார் ஒரு சிறந்த வைணீகர். அந்தக் குடும்பமே சங்கீதப் பரம்பரை

“அம்மா நீ என்ன வாசிக்கிறாய்?”

அம்மா மறுபடியும் வீணையைத் தன்மேல் தாங்கிக் கொண்டாள். ஸ்வரக் கட்டுகளைச் செல்லமாய் தடவினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/165&oldid=1025876" இலிருந்து மீள்விக்கப்பட்டது