பக்கம்:அஞ்சலி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160 லா. ச. ராமாமிருதம்

நான் அவள் கைக் குழலைப் பார்த்துக் கொண்டே “உனக்கு நன்றாக வாசிக்க வருமா?” என்றேன்.

“எனக்கு எல்லா வாத்தியங்களும் வரும். எல்லாவற்றையும் வீட்டில் சொல்லி வைந்திருக்கிறார்கள். வாத்தி யத்துக்கு ஒரு வாத்தியார் “பீட்”, நான் ஒரு சகல கலா வல்லி—”

மறுபடியும் அந்தச் சிரிப்பு பணித்துளிகளை முகத்தில் வாரியிறைத்தாற்போல் குளுமையாய்ச் சொரிந்தது.

அவள் குழலை மெதுவாய் உதட்டில் வைத்துக் கொண்டாள். உள்ளிருந்து வெளிப்பட்ட காற்று கறும்பின் இனிமையை வில்லால் வளைத்தாற்போல் ஒலித்தது. நான் கையிலிருந்து குழலை வாங்கினேன். வழு வழுப்பான அதன் மேற்புறத்தைத் தடவினேன். அவள் என் கண்களையே கவனித்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் சிறு ஏளனத்தில் சிரித்தபடி இருந்தன.

இம்மூங்கிலில் காற்றை அடைத்து மறுபடி இழுக்கும் முறையில் இழுத்தால் இது ஒரு வாத்தியம். மூச்சென்று ஒரு பேரைச் சொல்லி, இந்த உடம்பில் ஒரு காற்றை அடைத்து இழுத்தால் அது ஒரு பேச்சு,. பிராணன், உயிர், உலகம், உழலல், நான் குழலை உதட்டின் கீழ் பிடித்துக்கொண்டேன். அவள் நாக்கின் ஈரம் இன்னும் காயவில்லை. நான் ஊத முயன்றேன்.

திடீரெனக் காற்று எங்களைச் சுற்றிச் சுழன்று எழுந்தது. முகத்திலும் வாயுள்ளும் மோதிற்று. அவள் ஆடைகள் உடலோடு ஒட்டிக்கொண்டு படபடவென அடித்துக்கொண்டன. அவளைத் தன் இஷ்ட உருவில் வழித்தெடுப்பது போல் அவளைத் தன்னில் ஸ்னானம் செய்வித்தது. அசரீரமான காற்றிலிருந்தே சரீரமாய் உதயமானதுபோல் அவள் உருவக்கோடுகளில் வளைவுகள் பிதுங்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/170&oldid=1033476" இலிருந்து மீள்விக்கப்பட்டது