பக்கம்:அஞ்சலி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166 லா ச. ராமாமிருதம்

அம்மா பேசிக்கொண்டே போனாள். அவளுக்கு இனிக் கவனிக்க வேண்டியவர்கள் அவசியமேயில்லை.

“பகலாவது பரவாயில்லை. ராத்திரி ஏன் வரது? நான் நிஜமா கேக்கறேன். தூங்காதவர்களுக்கு ராத்திரி எதுக்கு? நடுராத்திரியில் திடுக்குனு முழிச்சுப்பேன். மரக் கிளைகளின் சந்திலே காற்று ஊளையிடும். உங்கள் அறையில் வெளிச்சம் தெரியும். ஆனால் எனக்குத் தைரிய முண்டோ? நான் சொல்றேன்; நீங்களுந்தான் என் தப்புக்குப் பொறுப்பு. ஒரு தடவையாவது நாற்காலியை நகத்திண்டு எழுந்து என்னண்டை வந்து என்னைத் தோட்டு “பாகீ தூங்கிட்டையா, பாகீ பயமாயிருக்கான்னு, கேட்டிருக்கேளோ? ஒரு தடவையாவது கேட்டிருந்தால் நான் துணிஞ்சிருக்க மாட்டேன். நடுக்காட்டில் என்னைக் கண்ணைக் கட்டி விட்டாச்சு. எனக்குக் கண் கெட்டுப்போச்சு. தனியாக் குருட்டு யோசனை பண்ணிப் பண்ணி எனக்குப் பிறந்த வீட்டுச் சபலமும்தான் வந்துடுத்து. நான் பிறந்த வீட்டிலிருந்து வந்த புதிசு. நான் முன்பின் யோசிக்கல்லே. உங்களை விட்டுப் பிரியத் துணிஞ்சூட்டேன். நான் வெறி பிடிச்சவளாயிட்டேன்.

“என்னை என் வீட்டிலே விட்டுடுங்கோன்னு உங்களை நான் ஏன் நேரில் கேட்டிருக்கக் கூடாது? எனக்கே தெரியல்லே. எனக்கு உங்களை அப்படிக் கேட்கப் பயமாயிருந்ததோ? என் மூளையேதான் கோணலாய் வேலை செய்ததோ? நான் போகத் துணிஞ்சுட்டேன். அப்பறம் போறது ஒன்றுதான் எனக்குக் குறியாயிருந்தது. பாக்கி எல்லாம் மறந்தேபோச்சு. மானம்—ஈனம்—”

“உன் பெண்மை—”

அப்பாவின் வார்த்தை ஒரே வார்த்தை. அதன் அரவம் தணல்மாதிரி ஜ்வலித்துக்கொண்டு ஜன்னலின் வெளியே உதிர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/176&oldid=1033479" இலிருந்து மீள்விக்கப்பட்டது