பக்கம்:அஞ்சலி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 191

பத்து நாட்கள் கழித்து, கின்னானின் தாயார் தன் பிள்ளைக்குச் சேர வேண்டிய சம்பளத்தை வாங்க வீட்டு வாசலில் நின்றாள். வயது ரொம்பவும் ஆகாவிட்டாலும், சருகாய் வற்றிச் சுருங்கிக் குன்றிப்போன உடல், அவளைப் பார்க்க ஸஹிக்கவில்லை. எழுந்து வந்து கட்டிக் கொண்டேன்.

“இந்தக் கட்டையைத் தீண்டாதே சாமீ—” அவள் குரலில் துக்கம்கூடத் தெரியவில்லை. ஜன்ம அந்தியின் அசதிதான் வெளிப்பட்டது. ‘கண்ணால் பார்த்தால் கூட விடியாது. எனக்கு மாத்திரம் இன்னமும் வேளை வராமல் காத்துக்கிட்டு நிக்கிறேன். காயும் பூவும் கொத்துமா அவங்க போய் சேர்ந்துட்டாங்க. பொன்னி நல்ல பொண்ணு சாமி. என்னை நல்லா கவனிச்சிட்டிருந்தா. என் மவன் வேறு அவள் வேறுன்னு சொல்லல்லே. பொன்னி நல்ல போண்ணு சாமீ. அவங்க நினைப்பிலே நீ எனக்கு ஒரு உபகாரம் பண்ணனும். அந்தக் கிணத்தைப் பொறுப்பா, நீ செலவு பண்ணி மூடியாவணும், இந்தப் பலியோடு அதன் வவத்துப் பசியாறட்டும். வேறே பலி வாங்க வேணாம்—”

ஒரு ஆண் ஒரு பெண், அவர்களின் முழு வித்து, மூன்றும் யாருக்குப் பலி? திடீரென ஒன்றுமே புரியாத ஒரு பயங்கரமான ஏக்கம் என்னைக் கவ்வியது: என்னைச் சுற்றி யாவும், தோட்டம், வீடு, சுவர்கள் அறையிலிருக்கும் சாமான்கள் எல்லாமே சர்வநாசப் புயலில் விண்டு, இடிந்து பொடிந்து என்னையும் தம்முடன் இழுத்துச் செல்வது போலிருந்தது.

“காயத்ரீ! காயத்ரீ!” என்று கூவிக்கொண்டே ஸ்னான அறைக்கு ஒடினேன். கதவைப் படபடவென்று தட்டினேன்.

“யாரது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/201&oldid=1033495" இலிருந்து மீள்விக்கப்பட்டது