பக்கம்:அஞ்சலி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 211

“This is it—” என்று சொல்லிக்கொண்டே டாக்டர் உள்ளே சென்றார்.

நான் உட்கார்ந்துகொண்டேயிருந்தேன். கண்ணைக் கரித்தது. அரைத் தூக்கமா, மயக்கமா, மூர்ச்சையா, எதிலிருந்தேன் என்றே புரியவில்லை. ஏனோ திடீரென்று வீட்டில் என் அறையில் சுவரோரத்தில் சாத்தியிருக்கும் அம்மாவின் வீணைமேல் நினைவு போயிற்று. என்னுடைய ப்ரமையில் அதிலிருந்து தானே “டிங் டிங்” என்று சப்தங்கள் கிளம்பி ஒன்றுடன் ஒன்று கொக்கி மாட்டிக்கொண்டு மாலையாகி, காற்றில் ஆடி அலைந்து மிதந்து வந்தது. யார் கழுத்தில் விழப்போகிறது? என் கழுத்திலா?”— சட்டென விழித்துக்கொண்டேன். டாக்டர் மெதுவாய்த் தோளை ஆட்டிக்கொண்டிருந்தார். “என்ன?” அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்தேன்.

“ஒன்றுமில்லை, உங்கள் குழந்தை இறந்துவிட்டது. சிரமமான கேஸ். உயிரோடுதான் வெளிவந்தது. ஆனால் பத்து நிமிஷங்கூடத் தக்கவில்லை.”

“காயத்ரீ காயத்ரீ?"— என்னை அறியாமலே வார்த்தைகள் புறப்பட்டன.

“தாயார் செளக்யந்தான். வேனுமானால் நீங்கள் போய்ப் பார்க்கலாம்—”

குழந்தையைப் பற்றிய நினைவே எழவில்லை. அதைப் பற்றி டாக்டர் என்ன சொன்னார் என்பதுகூட மறந்து விட்டது. அடிமேல் அடிவைத்து உள்ளே சென்றேன்.

காயத்ரீ கண்ணை மூடியபடி படுத்திருந்தாள். பனீரெனும் வெண்மையுடன் சுத்தமான துப்பட்டிக் கழுத்து வரை போர்த்தியிருந்தது அவ்வளவு பலஹீனமாய் அவளை நான் காண்கையில் நெஞ்சை அடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/221&oldid=1033509" இலிருந்து மீள்விக்கப்பட்டது