230 லா. ச. ராமாமிருதம்
தாள். ஆனால் என் நல்ல காலம், என் கழுத்தில் சரட்டைக் கட்டி உங்கள் சொத்தை இழுத்துக் கொண்டு வந்துவிட்டீர்கள்!”
சரடில் தொங்கிய தாலியைச் சட்டெனக் கையில் தாங்கி அவள் முத்தமிட்டுக்கொள்கையில், அவனுக்குத் தலை ‘கீர்’ரிட்டது. பயமாய்க் கூட இருந்தது.
இதுவரை இவள் யாரோ நான் யாரோ?
என்னை ஏன் நெருப்பா யெரிக்கிறாள்?
இவள் இப்படி என்னை எரிக்கலாமோ?
இவள் இப்படி இருக்கலாமோ?
“என் குற்றங்கள் எத்தனையோ. ஆனால் இனி எனக்குக் கவலையில்லை அத்தனையும் இனி உங்களுடையதே!”
“அப்படியென்ன உன் குற்றங்கள்?”
அவனுள் பீதி சலசலத்தது. இவள் பேச்சே பூதமாயிருக்கிறதே!
“எவ்வளவோ, என்ன இல்லை?
அமரிக்கையில்லை.
தலைநிமிர்ந்து இருக்கிறேன்.
வாயாடி!
பெருங்குரல்!
விடிந்து வெய்யிலடிக்கும் வரை தூங்குகிறேன். தூங்கினால் கட்டைமாதிரி ஆகிவிடுகிறேன். புகுந்த வீட்டில் என் தூக்கம் எவ்வளவு பொல்லாது என்று எனக்கே தெரியும், அதனால் நான் உங்களைக் கோரும் முதல் வரம் நீங்கள் தான் தினம் என்னை எழுப்பணும்!”