ஏகா 233
“எட்டென்ன, எண்பது ஆகட்டுமே! வேளைக்கும் காலத்துக்கும் ஏன் முடிச்சுப் போடறேள்? வேளை கலையாமல் இருந்தால், காலம் என்ன கடந்தும் என்ன செய்ய முடியும்?”
அவன் அவளை வியப்புடன் உற்று நோக்கினான். “ஏகா, ஏதேது! நீயா பேசறே?”
அவளுக்கு வார்த்தை தடைப்பட்டு ஊமையானாள்... முகம் மாறிற்று.
இது எது? நானா?
“எண்பதாம், ஆசையைப் பாரு! டேயப்பா! நான் எண்பது காணப்போறேனாக்கும்! இந்தக் குடும்பத்திலேயே ஆண்களுக்கு ஆயுசு கட்டை.”
அவள் வாயைப் பொத்தினாள். பொல பொலவென அவன்மேல் மலர்த் தளிர்கள் உதிர்ந்தன.
“விடு, விடு! ஏகா, மூச்சடைக்கிறது!”
அவள் வெறி அவனுக்குப் பயமாயிருந்தது. அவன் சுபாவம் உணர்ச்சிக்கு இலக்காகக் கூசிற்று. இத்தனை நாளாகியுமா, இவள் இப்படி—? இவள்மேல் எனக்கு இன்னும் இந்த வேகமிருக்கிறதோ?
பார்த்த முகமே பார்த்து, கேட்ட குரலே கேட்டு, குரலானே குரலே!
(எதிர்வீட்டில் ஒண்ணு புதுசா வந்திருக்கே, அது என்ன இங்கேயே இருக்கப்போகிறதா?
படிக்கிறதா, உத்தியோகம் பண்ணுகிறதா? பத்து நாளாய்க் கவனிக்கிறேன். நான் கிளம்பும் வேளைக்குக் காத்திருந்து என்னோடு படி இறங்கி, நான் ஏறும் வண்டியிலேயே ஏறுகிறது! நான் பின் தங்கினால் தானும் பின் தங்கறது. எனக்கு முன் ‘ஸ்டாப்’பில் இறங்கறது. வண்டு