இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
244 லா ச. ராமாமிருதம்
“அம்மா, டாக்டரை அழைத்து வா!”
“ஏகா!”
செவி தூரத்தில் அவள் இப்போது இல்லை.
வெளிப்புலன் எதன் அருகிலும் அவள் இப்போது இல்லை.
தூரங்களை, தூரங்களின் எல்லைகளை அவள் இப்போது கடந்துகொண்டிருந்தாள்.
“——!”
“இப்போது அழைத்தது யார்?”
பேரிட்டு அழைக்கவில்லை. குரல்கூடக் கொடுக்கவில்லை.
எழுச்சி எண்ணமாகி, எண்ணம் வார்த்தைப் படும் இடைவேளையின் தடங்கள் கூட இலாது, தடங்கலின் சிதைவிலாது தோன்றியது தோன்றியபடி தோன்றிய தருணமே தனக்கும் தன்னையழைத்ததற்கு மிடையே பாய்ந்து முறுக்கிய தந்தியே பாஷையாய்—
—தன்னை இப்போது அழைத்தது யார்?
“யாரது?”
அந்த முறுக்கின் உச்சத்தில் அவள் அலறல் அவளுக்கே கேட்கவில்லை.
“யாரது?”
திகில்.
திகிலின் அலைகள் மதில் மதிலாய் எழுந்து அவன் மேல் சரிந்தன.
திகிலின் சுழிப்பு தன் மையத்துள் அவளை உறிஞ்சுகையில், தன் முழுப் பலத்துடன் திமிறினாள்