பக்கம்:அஞ்சலி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20 லா. ச. ராமாமிருதம்



ஊட்டமும் சேரவே அப்புறமும் புத்தி வரவில்லை. எப்பவுமே வரவில்லை. என்றேனும் ஒருநாள் தன் கணவன் தேடிக்கொண்டு வருவான் என்று மனப்பால் குடித்தாள். விஷயம் முற்றிப்போனபிறகு மனதில் தோன்றினாலும் தன்னிடத்திற்கு திரும்பத் தைரியம் போய்விட்டது. பிறந்த விட்டுச் சோற்றைச் சோறாகத் தின்றுகொண்டு ஊர் சிரிக்க, வந்த இடத்திலேயே தங்கிவிட்டாள். எனக்கு எட்டு வயதாகியும் அப்பா என் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. பெற்ற பிள்ளைமேல்கூட எண்ணம் இல்லை பார் என்று என் தாயும் அவள் வீட்டாரும் குற்றம் மறைக்க அப்பாவை ஏசுகையில், அந்த வயதிலேயே என்னையறியாமல் எனக்கு ரத்தம் கொதிக்கும். இப்படி வீட்டில், பேச்சுவாக்கில், வெளியில் நாலுபேர் வார்த்தை வாக்கில், விஷயம் என்னுள் ஊறி, ஒருநாள் தாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓடிவிட்டேன். நடந்தே நாற்பது மைல் கடந்து அப்பா வீட்டைத் தேடியடைந்து கதவையிடித்தேன். மெலிந்த உடம்புடன் ஒருவர் கதவைத் திறந்தார்.

“அப்பா, நீதானே என் அப்பா?” என்று நான் அவரை முதன் முதலாய்க் கேட்ட கேள்வி இன்னமும் என் காதில் ஒலிக்கிறது. புழுதி படிந்த என்னை அப்படியே அவர் வாரிக்கொண்டார். “நான் உன் அப்பனோ இல்லையோ, கண்டிப்பாய் நீதான் என் மகன்” என்றார். இப்போப்போல் இருக்கிறது. என் முகத்தை நனைத்த அவர் கண்ணிர் இன்னமும் உலரவில்லை. அந்தக் கேள்வியிலும் அந்தப் பதிலிலும் சூட்சுமமான—விதவிதமான—அர்த்தங்களைச் சமயத்துக்குத் தக்கவாறு இன்னமும் தோன்றிக்கொண்டிருக்கின்றன. மனம் சளைக்கும் போதெல்லாம், இந்தக் கேள்வியையும் பதிலையும் ஞாபகப்படுத்திக் கொள்கையில் புதுப் பலம் பெறுகிறேன்.

“அப்பா, நீதானே என் அப்பா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/30&oldid=1033390" இலிருந்து மீள்விக்கப்பட்டது