பக்கம்:அஞ்சலி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22 லா. ச. ராமாமிருதம்

 சமயம் அவரை நான் லேசாகத தொட்டுக்கூட பார்த்துக் கொள்வேன். உடம்பும் சற்றுப் பூஞ்சைதான். என் மனத்திலிருப்பதைக் கண்டுகொண்டு புன்னகை புரிவார். அந்த சமயங்களில் அவர் முகம் பலகணி திறந்ததுபோல் திடீரென வெளிச்சமாகும்.

“நான் ஒவ்வொரு பரீட்சையாக நன்கு தேறிவந்தேன். கடைசியில் உத்தியோகப் பரீட்சைக்கு டில்லிக்குப் போனேன். இந்தியாவில் நாலு பட்டணங்களிலிருந்தும் பொறுக்கியெடுத்தாற்போல் நானுாறு பேர் பரீட்சைக்கு வந்திருந்தனர். அத்தனைபேரிலும் முதலாய்த் தேறினேன். விஷயத்தை நான் தந்தி மூலமாவோ, தபால் மூலமாவோ, அப்பாவுக்குத் தெரிவிக்கவில்லை. நேருக்கு நேர் சொல்லி முகத்தைப் பார்க்க வேண்டாம்? அன்றே வண்டியேறி மூன்றுநாள் பிரயாணம் செய்து ஊர் திரும்பினேன்.

“அவர் என்னை தூரத்தில் வரும்போதே கண்டுவிட்டார்.”

‘அப்பா, பாஸ்!’ என்று கத்தினேன்.

“அப்பா என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே மிரள மிரள விழித்தார். -

“என்னப்பா? ஒண்ணுமே சொல்லமாட்டேன்கிறையே! நான் பாஸ் அப்பா, பஸ்ட் கிளாஸில் பாஸ்—அப்பா என்னவோ சொல்ல முயன்று கையைத் தூக்கித் தூக்கிக் காட்டி, தடாலென்று என்மேல் விழுந்து விட்டார். கண்கள் என்னையே பார்த்த பார்வையில், வாய் சிரிப்பிலும் அப்படியே உறைந்து போய்விட என் ஆலிங்கனத்தில் அவர் சவமாய்க் கொண்டிருந்தார்.

“குளிக்கப் போனவிடத்தில் மூழ்கிப்போய் தான் இறந்து போய்விட்டோம், என்பதை உணரும் உணர்வு மாத்திரம் இருந்தால் எப்படி இருக்கும்! கொஞ்சநஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/32&oldid=1020884" இலிருந்து மீள்விக்கப்பட்டது