அவள் விளக்கை ஏற்றவில்லை. மேஜையின்மேல் தட்டை வைத்துவிட்டுப் போய் அவன் பக்கலில் அமர்ந்தாள்.
“என்ன படமெடுத்திருக்காப்போல் இருக்கு!”
அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
அவள் கழுத்தையணைத்து தன் பக்கம் இழுத்தான். அவள் தன்னை விடுவித்துக்கொண்டாள்.
“ஏனாம்?”
“ஒன்றுமில்லை. இப்போ என்ன அதைப் பற்றி?” என்று சிரித்துக்கொண்டே மறுபடியும் அவளை அணைக்க முயன்றான்.
“இல்லை; உங்கள் புகைச் சிரிப்பெல்லாம் வேண்டாம். விஷத்தை முழுக்கக் கக்கிடுங்கோ. உங்களை முன்னால் சுத்தி பண்ணியாகணும். இல்லாட்டா வயத்தில் அத்தனையும் வெச்சிண்டு எல்லாரையும் வேக அடிச்சூடுவேள்.”
“ஹூ!”
“சொல்லுங்கோ!”
“ஒன்றுமில்லை.”
“பரவாயில்லை, சொல்லுங்கோ.”
“இன்றைக்கு ஆச்சரியமாய், நீ எதிர்பாராக வெகுமதி உனக்கு தயார் பண்ணிவைக்கலாம் என்றிருந்தேன். அது என்னடாவென்றால் புஸ்வாணமாய்ப் போய்விட்டது. அதுதான்.
“அப்படி என்ன வெகுமதியோ?”
“இன்றைக்கு நமக்குப் பரிமாறினானே அந்தப் பையனை உனக்கு ரொம்பவும் பிடித்திருந்ததோன்னா?”
மெளனமானாள்.