பக்கம்:அஞ்சலி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தரங்கிணி 35

“உஷ்! சும்மா இரு...”

“நீங்கள் இதனாலேயே வேறே ஆபிடுவேளா, ஆயிட முடியுமா?—நீங்கள் என்றைக்கும் என் சொத்துத்தானே! எல்லாமே என்னுடையதுதான்— நீங்கள் என்னிஷ்டப்படி கேட்கிறேள், அவ்வளவுதான். நீங்கள் மாத்திரம் என்ன, எனக்கு இளையாளாய் நான் கேட்கிறவளும் என்னுடையவள் தான். உங்களால் அவள் வயிற்றில் பிறக்கப் போவதும் என்னுடையதுதான். என்னுடையதுதான் என்றால் என்ன? நம்முடையது! நமக்கு என்று ஒண்ணு வேணும், கண்டிப்பாய் வேணும்.”

“உஷ்! தரங்கிணி.”

“உஷ்!” அவளும் கூடச் சேர்ந்து சின்னக்குழந்தையைப் பயமுறுத்துவதுபோன்று, மூக்கின்மேல் விரலை ஆட்டிக் கண்களை உருட்டி விழிக்க முயன்றாள். ஆனால் உண்மையில், வலியின் ஜன்னி அவள்மேல் மெதுவாய் இழுக்கும் திரைக்குப் பின் போய்க்கொண்டிருந்தாள், போகும் வழியில் ஏதேதோ பிதற்றிக்கொண்டே.

“நமக்கு என்று ஒண்னு கண்டிப்பாயிருக்கணும். கோயிலுக்கு இன்னிக்குப் போனதிலே இதை நான் கண்டிப்பாய்க் கண்டுவிட்டேன்.”

“எதை?” கவலையுடன் அவன் அவள் நெற்றியில் கை வைத்தான். அதில் முத்துக் கொதி ஏற ஆரம்பித்து விட்டது.

“ஒண்ணு என்பதை! அது இருக்கோ இல்லையோ, அத்தனைபேரும் அதைச் சுத்தித்தானே வரா! எல்லாருக்குமே அந்த ஒண்னு இருக்கு என்கிற திடம் இருக்கா என்ன? இல்லாவிட்டாலும் அந்த ஒண்னு என்கிற எண்ணமாவது அவசியமாய் வேண்டியிருக்கு. இது எனக்குக்கூடத் தெரிகிறது. உங்களுக்கு ஏன் தெரியவில்லை? உங்க அப்பாவுக்கு நீங்கள் அதுவா இருந்தேள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/45&oldid=1022857" இலிருந்து மீள்விக்கப்பட்டது