***
பாதியிரவில் தரங்கிணி திடுக்கென விழித்துக்கொண்டாள். அவளுக்குத் தூக்கம் சரியாயில்லை. முழங்கால்களைக் கட்டிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தாள். ஜன்னலுக்கு வெளியே கொல்லைப்புறத்தில் பட்டை நிலா ஜமாய்த்துக் கொண்டிருந்தது. தென்னந்தோப்புகளின் மரங்களின் சந்துகளின் வழி சற்று உன்னிக் கவனித்தால் ஆற்றுமணல் இப்போதுகூட நன்றாய்த் தெரியும். எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள், என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் திடீரென்று அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.
“தரங்கிணி!”
கண்களை அவசர அவசரமாய்த் துடைத்துக் கொண்டாள். அறைவாசலில் அவன் உருவக்கோடுகள் அடைத்துக்கொண்டிருந்தன.
“இதோ இருக்கேன்?”
“தூங்கவில்லை?”
“இல்லை. இப்பொத்தான் முழிப்பு வந்தது. நீங்களும் வந்தேள்.”
“எனக்குத் தூக்கம் வரவில்லை”— பெருமூச்செறிந்தான். “உன்னோடு பேசலாம் என்று வந்தேன்.”
“இருங்கோ, விளக்கையேத்தறேன்.”
“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.” உள்ளே வந்தான்.
“என்ன, சுற்றுமுற்றும் பாக்கறேள்?”
“உட்காரத்தான், இங்கே நாற்காலியிருந்ததே!”
“கட்டிலிலேதான் இடம் இருக்கே உட்காருங்கோ” அவளுக்கு ஏனோ மறுபடியும் துக்கம் அடைக்க ஆரம்பித்து