54 லா. ச. ராமாமிருதம்
அவன் உடல் முழுதுமே ஒரு வேகம் சுழன்று ததும்புவது போல் ப்ரமாதமான உணர்ச்சியைப் பார்ப்பவர் மனத்தில் தருவித்தது.
கன்னத்தை லேசாய் அவன் மார்மேல் தேய்த்துக் கொண்டாள்.
“உங்களுக்குத் துர்க்கம் வரல்லையா?”
“இல்லை. வா என்றால் வருமா?”
“தோ—! அதென்ன?”
அவள் கைகாட்டும் வழி, எதிர் வீடுகளின் மொட்டைமாடிகளுக்கு அப்பால், தோப்புகளினிடையில் ஒரு சுடர் ஆடிற்று.
“மாஞ்சி, உள்ளே வா.”
இருளில் அவன் முகத்தை அவள் பார்க்க முடியவில்லை.
“என்னது அது, இத்தனை நாழிக்குமேல்? எந்த விளக்கு அப்படி எரியறது?”
“மாஞ்சி, உள்ளே வா.”
“ஏன், சொல்ல மாட்டேளா?!”
அவன் குரல் இறுகிற்று.
“மாஞ்சி, அதுதான் பாச்சு.”
“அடே என் கண்ணே, பாச்சு!” மாஞ்சி நெருப்பை மிதித்தவளாய் விட்டாள்.
“நீயாடா எரியறே!”
“மாஞ்சீ!”
மீனாவும் நீனாவும் மாஞ்சியின் கதறலில் விழித்துக் கொண்டு ஒன்றும் புரியாமல் திகிலில் தாங்களும்கூடச்