பக்கம்:அஞ்சலி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“இப்போ எனக்கு இத்தனை வயசுக்கு மேலே இனி மேல் என்ன! உங்கள் ஏற்பாடெல்லாம் சரிப்படாதப்பா. எல்லோரையும்போல் நான் இருக்கேனா? கலியாணமோ சத்தியத்தின் ஏற்பாடாய்ப் பண்ணறோம். அதைப் பொய்யில் சாதித்துவிட முடியுமா? ஏதோ பிச்சைக் கயிறுக்கு ஆசைப்பட்டு அப்புறம் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி அவஸ்தைப்பட எனக்கு உடம்பிலே சக்தியிருந்தாலும் மனசுலே இல்லே. அதை விட செத்துப் போயிடற்தே—”

அப்பாவுக்குக் கனகோபம் வந்துவிட்டது.

“எனக்கு அப்பவே தெரியுமே. இந்தமாதிரி மட்டந்தட்டிப் பேச உனக்குப் புத்தியும் உண்டு, அதற்குத் தகுந்தாற்போல் உனக்கு இடமும் கொடுத்தாச்சு. நீதான் சகலமும் அறிந்தவள் என்று பேசாதே. எங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். எப்படியும் எனக்கப்புறம் தான் நீ பிறந்தாய் என்பதை மறந்துவிடாதே!”

லக்ஷ்மி பதில் பேசாமல் கையில் ஒரு பூவைத் திருகிக்கொண்டு நின்றாள். அப்பாவுக்கு அவசரம் கொஞ்சம் தணிந்தது.

“லக்ஷ்மி! லோகத்தில் எல்லோருமே பாவிகள் என்று நினைத்துக்கொள்ளாதே. எல்லோர் வீட்டிலும் ஒருசமயம் இல்லாவிட்டால் ஒரு சமயம் எண்ணெய் காய்ந்து கீழே கொட்டியிருக்கும்; பால் பொங்கி வழிந்திருக்கும்; குத்துவிளக்கை ஏற்றும்போது முன்றானையில் தீப்பிடித்திருக்கும். முதலில் கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும் அப்புறம், நீயும் கையில் ஒன்று ஏந்திக்கொண்ட பிறகுஎல்லாம் சரியாய்ப் போய்விடும். உன்னைவிட மோசமான ஊனம் ஏற்பட்டவர்களுக்கெல்லாம் விடிந்திருக்கிறது. உலகத்தில் ஈவு, இரக்கம், தயை அநுதாபம் எல்லாம் ஒரு சமயம் இல்லாவிட்டால் ஒரு சமயம்—எல்லாவற்றிற்கும் வழியிருக்கிறதடீ!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/78&oldid=1033420" இலிருந்து மீள்விக்கப்பட்டது